தாதா தாவூத் விருப்பம் குறித்து நாங்க ஏன் விசாரிக்கணும்?: மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் இந்தியா திரும்பி வந்து சட்டத்தை சந்திக்க தயாராக இருப்பது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த கிஷோர் சம்ரிதே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ள மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் நாடு திரும்பி சட்டத்தின் முன்பு சரண் அடைய விரும்புவதாக முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் மற்றும் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தாவூத் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தும் அது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தாவூத் கூறியிருப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உண்மையை கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
அந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தாவூத் விவகாரத்தில் நீதித்துறை தலையிட வேண்டியது இல்லை என்று கூறி அந்த பெஞ்ச் கிஷோரின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.