ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை!
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமக்கு சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதால், அவர்கள் வெளியில் இருந்தபடி வழக்கை நடத்தினர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ஒத்திவைத்துள்ளார்.
இதனிடையே கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த மேல்முறையீட்டு விசாரணை முறையாக நடக்காததால், அதற்கு தடை விதிக்க வேண்டும்; அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தது. அதே நேரத்தில் பவானிசிங்கை நீக்கக் கோரும் மனு மீது மார்ச் 18-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் மற்றும் கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் அன்பழகனின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அன்பழகனின் மனுவை ஏற்று பவானிசிங்கை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் மேல்முறையீட்டு மனு மீது மீண்டும் விசாரணை நடைபெறும் நிலை உருவாகும்.
இவ்வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஏப்ரல் 18-ந் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. மேலும் ஜாமீன் வழங்கப்பட்ட போது மார்ச் 18-ந் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடித்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
தற்போது உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனையின் அடிப்படையில் மார்ச் 18-ந் தேதிக்கு முன்பாகவே ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களது தரப்பு வாதங்களை நிறைவு செய்தனர். அரசுத் தரப்பும் தமது வாதத்தை நிறைவு செய்துவிட்டது.
இந்நிலையில் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் மேற்கொள்ள இருக்கும் முடிவைப் பொறுத்தே ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications