பக்..பக்.. திக்.. திக்.. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. ஜெயலலிதாவுக்கு நாளையே ஜாமீன் கிடைக்குமா? அல்லது அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டி வருமா என்பது குறித்து அதிமுகவினர் பரிதவிப்பில் உள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டு உள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவரது சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அவரது ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த ஜாமீன் மனு (எண்: SR 7900/2014) கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் சிக்ரி, லோகு ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு (நாளை) எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை 40-வது வழக்காக நீதிபதிகள் விக்ரம்ஜித்சென், பிரபுல்லசந்திரபத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், நாரிமனின் மகன் ரோஹிண்டன் நாரிமன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நிராகரித்த தீர்ப்பில் மனோஜ் நரூலா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டியிருக்கிறார். எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தால் அந்த தீர்ப்பு விமர்சனத்துக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே, பாலி நாரிமன், ஜெயலலிதாவுக்காக வாதிட தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.
மேலும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் பவானி சிங் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான தேமுதிகவைச் சேர்ந்த ஜி.எஸ். மணியும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் இருந்து எனக்கு நோட்டீஸ் வந்தால் நாளை ஆஜராவேன்... எனக்கு எதிரான மனுக்களைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்று பவானிசிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் தம் பங்குக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தானும் இந்த வழக்கின் ஒரு அங்கம்.. அதனால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று சுவாமி மனுவில் கூறியுள்ளார்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தில் நாளை ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர் அதிமுகவினர்.