பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? ஸ்ரீனிவாசன், நிரஞ்சன் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு அளித்த புகாரின் அடிப்படையில் என்.ஸ்ரீனிவாசன், நிரஞ்சன் ஷாவிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு கிரிக்கெட் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதில், 70 வயதிற்கு மேற்பட்டோர் பிசிசிஐ-யின் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது, அரசியல் பதவியில் இருப்பவர்கள் எந்த பதவியிலும் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, 70 வயதைத் கடந்த என்.சீனிவாசனும், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ஷா-வும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் கடந்த மாதம் நடந்த கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவர்கள் இருவரும், மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் என்ற பெயரில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, நிர்வாகக்குழு அளித்துள்ள புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என்று என். ஸ்ரீனிவாசன் மற்றும் நிரஞ்சன் ஷா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், பிசிசிஐ-யின் எந்த பதவியையும் வகிக்க அவர்கள் தகுதியற்றவர்கள் என்றால், இருவரும் எந்தவொரு கிரிக்கெட் சங்கம் மூலம் எப்படி பிரதிநிதியாக முடியும் என்று கேள்வி கேட்டுள்ளது. அத்துடன் இந்த புகார் குறித்து வருகிற 24-ந்தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.