அயோத்தி விவகாரம்: உடனே விசாரிக்க கோரிய சு.சுவாமி கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க கோரிய சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
டெல்லி: அயோத்தி பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கை உடனே விசாரிக்க கோரிய பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை பங்கிட்டு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது, இது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சனை; நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண்பதுதான் சரியானதாக இருக்கும். தேவைப்பட்டால் மத்தியஸ்தம் செய்ய ஒருவரை நீதிமன்றமே நியமிக்கும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
அத்துடன் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச பேச்சுவார்த்தை குறித்த கருத்தை தெரிவிக்குமாறும் உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை ஏற்று விசாரணை நடத்த இது சரியான தருணம் அல்ல. இந்த வழக்கில் புதிய விசாரணை தேதியையும் அறிவிக்க முடியாது. ஏற்கனவே நீதிமன்றத்துக்கு வெளியே சமரச தீர்வு காண வலியுறுத்தியுள்ளோம். அப்போது பிறப்பித்த உத்தரவு அடிப்படையில்தான் வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.