வறுமை ஒழிப்பில் அறிவியல், தொழில்நுட்பம் முக்கிய பங்கு: பிரதமர் மோடி
மும்பை: நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையில் 102 வது அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் இருந்து நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் உள்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
102 வது இந்திய அறிவியல் மாநட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அறிவியல் மாநாட்டில் பேசுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். நாட்டின் வறுமையை குறைக்க அறிவியலும் தொழிநுட்பமும் பெரும் பங்காற்றியுள்ளன.
சிறந்த நிர்வாகத்துக்கு அறிவியல் ஆற்றியுள்ள பங்கை அளவிட முடியாது. விஞ்ஞானிகளின் தொண்டு உள்ளத்துக்கு தலை வணங்குகிறேன். விஞ்ஞானிகள் நாட்டை முன்னெடுத்து சென்றுள்ளனர்.
உலகின் முன்னோடிகள் நாம் தான் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ளோம். எப்போதெல்லாம் உலகம் தனது கதவுகளை அடைத்ததோ, அப்போதெல்லாம் நமது ஆராய்ச்சியாளர்கள் உறுதியுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துள்ளனர்.
அறிவியல் வளர்ச்சி தான் மனிதனை வளர்ச்சி பெற வைத்தது. வறுமை நோய்களை போக்குவதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை எல்லைகளை கடந்து உலகை இணைக்க கூடியவை.
நாட்டில் ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். மங்கள்யானின் வெற்றி இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் உயர்த்தியுள்ளது. அறிவியல் துறைகளின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.