1962ஆம் ஆண்டு சீனாவுடனான போருக்கு பிரதமராக இருந்த நேருவே காரணம்- 'திடுக்' தகவல்!
1962ஆம் ஆண்டு இந்தியா- சீனா போர் நிகழ்ந்த போது டைம்ஸ் ஏட்டின் டெல்லி சிறப்பு செய்தியாளராக இருந்தவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவில் மேக்ஸ்வெல். தற்போது 87 வயதாகும் மேக்ஸ்வெல், தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 1962ஆம் ஆண்டு இந்தியா-சீனா போர் பற்றிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியா-சீனா போர் தொடர்பாக 1963ஆம் ஆண்டு ராணுவ தளபதிகளாக இருந்த ப்ரூக்ஸ் மற்றும் பிரேம் பகத் ஆகியோர் தயாரித்த அறிக்கையின் ஆவணங்களைத்தான் மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ளார்.
1962ஆம் ஆண்டில் நடந்த சீனப் போரில் நிச்சயமாக தோற்றுவிடுவோம் என உறுதியான பிறகும் ராணுவத்தினரை யுத்தம் நடத்த நேரு உத்தரவிட்டதாகவும் ஏழை நாடான இந்தியாவை போருக்கு தள்ளிய நேருவின் முடிவு முட்டாள் தனமானது என்று ராணுவ குறிப்புகள் தெரிவிப்பதாகவும் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து இந்த முக்கிய தகவலை அரசியல் காரணங்களுக்காக இந்திய அரசு தொடர்ந்து ரகசியமாக வைத்திருப்பதால் தாம் வெளியிட்டதாகவும் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் மேக்ஸ்வெல் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் இந்திய அரசியல் களத்தில் பரபரப்பான விவாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.
இந்த ரகசிய ஆவணங்களை பொதுமக்களிடத்தில் பகிரங்கப்படுத்தாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏன் மறைக்கிறது என்று பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியிருக்கிறது.