சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு- ஜெ. நேரில் ஆஜர்! "பிரதமருக்கு'" சமமான பாதுகாப்பு
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை பெங்களூர் தனிநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி நேரில் ஆஜராகும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு பிரதமருக்கு சமமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்..
பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்துகுவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு கூறப்படுகிறது. அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா சுதாகரன், இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா வருகையையொட்டி, பாதுகாப்பு கருதி தனிநீதிமன்றம் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக தனிநீதிமன்றத்தைத் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன்
மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோர்ட்டுக்கு ஹெலிகாப்டரில்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் வந்து இறங்குகிறார்.
போலீஸ் கமிஷனர் ஆய்வு
இந்த நிலையில் நேற்று மதியம் பரப்பன அக்ரஹாராவில் உள்ள தனிநீதிமன்றத்துக்கு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி சென்றார். அவர், தனிநீதிமன்றத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அதுபோல, பரப்பனஅக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திற்கும் சென்று போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆய்வு செய்தார்.
5 ஆயிரம் போலீசார்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன் கூறியதாவது:
பரப்பன அக்ரஹாராவில் உள்ள தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவதையொட்டி அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. அனைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சிறப்பு சோதனை சாவடிகள்
தமிழக எல்லையான ஓசூரில் இருந்து பரப்பனஅக்ரஹாரா வரை சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகுதான் பெங்களூருக்குள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
பிரதமருக்கு சமமான பாதுகாப்பு
ஒரு பிரதமர் வருகை தந்தால் எந்த அளவுக்கு பாதுகாப்பு செய்யப்படுமோ, அதற்கு சரிசமமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு ஹரிசேகரன் கூறினார்.
பொதுமக்களுக்கு தடை
நீதிமன்ற வளாகத்தின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வழக்கறிஞர்கள், போலீசார், அதிகாரிகள் தவிர பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.