எப்படியெல்லாம் இந்த நாட்டை அழிக்கிறது இந்தக் கருப்புப் பணம் பாருங்கள்!
டெல்லி: அடுத்த வேளை சோறு சாப்பிட என்ன வழி என்று தெரியாமல் விழி பிதுங்கிக் காத்திருக்கும் மக்கள் கோடானு கோடி ஒருபக்கம்.. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி உள்ளிட்ட வெளிநாட்டுக் கைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசுகள் மறுபக்கம்.. இந்த புல்டோசர் கேப்புக்குள் புகுந்து கோடி கோடியாக கருப்புப் பணத்தை பல்வேறு உலக வங்கிகளில் குவித்துக் கொளுத்துத் திரியும் ஒரு கூட்டம் இன்னொரு பக்கம். இதுதான் இன்றைய இந்தியாவின் அவல நிலை.
இந்தியாவின் கருப்புபப் பணம் எவ்வளவு என்பதற்கு யாரிடமும் சரியான கணக்கு இல்லை. ஆனால் மிகப் பெரிய அளவில், நம்ப முடியாத அளவுக்கு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் குவிந்து கிடக்கிறது என்பது மட்டும் உண்மை.
உத்தேசமாக 28.6 லட்சம் கோடி முதல் ரூ. 86.8லட்சம் கோடி வரை இந்தியர்களின் கருப்புப் பணம் இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
2011ல் விஸ்வரூபம்
இந்தியர்களின் கருப்புப் பண விவகாரம் கடந்த 2011ம் ஆண்டு திடீரென விஸ்வரூபம் எடுத்தது. அப்போதைய மத்திய அரசு இந்திர்களின் கணக்கில் வராத கருப்புப் பணம் குறித்து ஆராய ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.
இதுவரை இறுதி அறிக்கை தாக்கலாகவே இல்லை
இதுகுறித்து விசாரித்த அந்தக் கமிட்டி இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்தது. ஆனால் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவே இல்லை.
கணக்கில் காட்டப்படாத வருமானம்
பெரும்பாலும் கருப்புப் பணம் என்பது கணக்கில் காட்டப்படாத வருமானமே ஆகும். வரிவிதிப்பிலிருந்து தப்பும் இந்த கோடானு கோடி பணம் இந்திய வங்கிகளில் இல்லாமல், வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கப்படுகிறது.
பெரும் வரி இழப்பு
இப்படி திருட்டுத்தனமாக வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கப்படும் கருப்புப் பணத்தால் அரசுக்கும், நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்படுகிறது.
1948 முதல் 2008 வரை
நாடு சுதந்திரமடைந்த பின்னர் அதாவது 1948ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான கால அளவில் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்தியக் கருப்புப் பணத்தின் அளவு ரூ. 28.6 லட்சம் கோடி என்று வாஷிங்டனைச் சேர்ந்த அமைப்பின் கணக்கு கூறுகிறது.
இந்தியாவின் 25 சதவீத ஜிடிபிக்கு சமம்
இந்த அளவானது, இந்தியாவின் ஜிடிபியில் 25 சதவீத அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ கணக்கு வேறு
ஆனால் முன்னாள் சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங் கூறிய ஒரு விவரப்படி, இந்த கருப்புப் பணத்தின் அளவானது 31.4 லட்சம் கோடி என்பதாகும்.
பாஜக கூறியது என்ன
ஆனால் 2011ம் ஆண்டு பாஜக அமைத்த ஒரு குழு ஆய்வின்படி கிட்டத்தட்ட ரூ. 86.8 லட்சம் கோடி கருப்புப்பணம் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறியது.
|
ஸ்விஸ் வங்கிகளில் மட்டும்
ஸ்விஸ் வங்கிகளில் மட்டும் கடந்த 2013 டிசம்பர் மாத நிலவரப்படி கிட்டத்தட்ட ரூ. 14,000 கோடி அளவுக்கு இந்திய கருப்புப் பணம் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. இது 2012ம் ஆண்டை விட 42 சதவீதம் அதிகமாகும்.
2009ல் ஜெர்மனி கொடுத்த லிஸ்ட்
கடந்த 2009ம் ஆண்டு ஜெர்மனி ஒரு கருப்புப் பணப் பட்டியலை இந்திய அரசிடம் கொடுத்தது. அதில், எல்ஜிடி வங்கி, லீச்சென்ஸ்டைன் ஆகியவற்றில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரம் இடம் பெற்றிருந்தது.
ராம்ஜேத்மலானி போட்ட வழக்கு
அதே ஆண்டில் ராம் ஜேத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்குப் போட்டார். அதில் வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரியிருந்தார்.
2011ல் பிரான்ஸ் கொடுத்த லிஸ்ட்
இந்த நிலையில் 2011ம் ஆண்டு பிரெஞ்சு அரசு ஒரு பட்டியலை கொடுத்தது. அதில், 782 இந்தியர்களின் கருப்புப் பண விவகாரம் குறித்த விவரம் இடம் பெற்றிருந்தது. ஜெனீவாவில் உள்ள எச்எச்பிசி வங்கியில் குவித்து வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் குறித்த விவரம் அதில் இருந்தது.
சிறப்பு குழுவை நியமித்த மோடி அரசு
2014ம் ஆண்டு மே 27ம் தேதி மோடி அரசு பதவிக்கு வந்ததும், கருப்புப் பண விவகாரம் குறித்து விசாரிக்க தனி புலனாய்வுப்படையை அமைத்தது.
பல்டி அடித்த மோடி அரசு
ஆனால் இதே மோடி அரசு அக்டோபர் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் கூறுகையில், வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் குவித்து வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் நாட்டின் வரி விதிப்பு முறையே ஸ்தம்பித்துப் போய் விடும் என்று கூறியது.
3 பேரின் பெயர்கள் மட்டும் ரிலீஸ்
இன்று 3 கருப்புப் பண முதலைகளின் பெயர்களை மட்டும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் மற்ற திமிங்கலங்கள் குறித்து அரசு எப்போது வாய் திறக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.
ஊழலை மிக மோசமான புற்றுநோய்
ஊழல் ஒரு சமுதாயத்திற்கு எந்த அளவுக்கு புற்றுநோய் போல மிக மோசமானதோ, அதை விட மகா மோசமானது, சமுதாயத்தை அழித்து விடும் அபாயகரமான நச்சு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் அரசும் அதை உணர்ந்து இதுபோன்ற விஷக் கிருமிகளை வேரோடு அழித்து மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் இறங்க வேண்டும். இதில் பாரபட்சமே கூடாது - அரசியல் கூடாது - என்பதே மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.