"ஜெ. சொத்து குவிப்பு" வழக்கறிஞர் ரஞ்சித் குமார் நாட்டின் புதிய சொலிசிட்டர் ஜெனரல்?
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்காக உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வருகிற மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், நாட்டின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் புதிய அரசு அமைந்த உடன் அட்டர்னி ஜெனரால இருந்த வாகனவதி மற்றும் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த மோகன் பராசரன் ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான ரஞ்சித்குமார், குஜராத் மாநில அரசு தொடர்பான ஏராளமான வழக்குகளில் அம்மாநிலத்துக்காக ஆஜராகி வாதாடியவர் ரஞ்சித்குமார்.
அண்மையில் குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கிலும் அப் பெண்ணின் குடும்பத்தார் சார்பில் ரஞ்சித் குமார் ஆஜராகி, விசாரணை தேவையில்லை என்று வாதாடினார்.
அத்துடன் பெங்களூருவில் நடைபெற்றுவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதாடியுள்ளார். இவரையே நாட்டின் புதிய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான ஒப்புதலை, உயர்பதவி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நேற்று அளித்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மூத்த வழக்கறிஞர்களான மணீந்தர் சிங், எல். நாகேஸ்வர் ராவ், துஷார் மேதா, பி.எஸ். பாட்வாலியா, நீரஜ் கிஷண் கவுல் ஆகியோரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக நியமிக்கவும் மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.