'2ஜி' வழக்கிலிருந்து தூக்கப்பட்டார் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்...
டெல்லி : '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அமலாக்கத் துறையின் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகிய, கே.கே.வேணுகோபால், விசாரணையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தனித் தனியாக விசாரித்து வருகின்றன; இதனை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. மத்திய அமலாக்கத் துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர், கே.கே. வேணுகோபால் ஆஜராகி வந்தார். அமலாக்கத் துறை, மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
இந்நிலையில், நிதி அமைச்சகம் அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதில் கூறப்பட்டிருந்ததாவது...
உச்சநீதிமன்றத்தில், கே.கே.வேணுகோபாலின் செயல்பாடுகள், அமலாக்கத் துறையின் நிலைக்கு எதிரானதாகவும், முரண்பாடாகவும் உள்ளன. வழக்கின் விசாரணையில், அமலாக்கத் துறை அல்லது வருவாய் துறையின் அனுமதியின்றி, சில விஷயங்களை அவர் செய்து உள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ராஜேஸ்வர் சிங் சார்பில், அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதனால், வேணுகோபாலை இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், வேணுகோபாலை விசாரணையில் இருந்து நீக்குவதாக, அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. இவருக்கு பதிலாக, வேறு ஒருவர், சிறப்பு வழக்கறிஞராக விரைவில் நியமிக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications