காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகளுக்கு செம்ம நோஸ் கட் தந்த வாக்காளர்கள்- டெபாசிட் கூட காலி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பிரிவினைவாதிகள் பலரையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளனர் வாக்காளர்கள். இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாத் கட்சி வேட்பாளர்கள், அவருடன் கை கோர்த்த ஜமாத்- இஸ்லாமி இயக்கத்தினர் என பிரிவினைவாதிகள் பலரும் படுதோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் சகோதர் அய்ஜாஜ் அகமது குருவுக்கு வெறும் 129 ஓட்டுகள்தான் கிடைத்தன.
லோக்சபா தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்ததால் பேசப்பட்டவர் பொறியாளர் ரஷீத். அதுவும் சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

இதனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பொறியாளர் ரஷீத்தின் அவாமி இதிஹாத் கட்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ரஷீத்துடன் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும் கூட்டணியாக கை கோர்த்தனர். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பிரிவினைவாதம் பேசுகிற சக்திகள் களமிறங்கியதால் பிரதான அரசியல் கட்சிகள் சற்றே கலக்கமடையவும் செய்தன. அதுவும் பொறியாளர் ரஷீத், கிங் மேக்கராக உருவெடுப்பாரோ? என்கிற கேள்விகளும் எழுந்தன.
ஆனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் ரஷீத் கட்சியோ ஜமாத் இ இஸ்லாமி இயக்கமோ ஏற்படுத்தவே இல்லை. ஒன்றிரண்டு வேட்பாளர்களைத் தவிர பெரும்பாலானோர் டெபாசிட்டுகளையே பறிகொடுத்திருக்கின்றனர்.
நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவின் சகோதரர் அய்ஜாஜ் அகமது குரு, ஷோபோர் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் அவருக்கு கிடைத்த மொத்த வாக்குகள் எண்ணிக்கை வெறும் 129. இந்த தொகுதியில் நோட்டாவுக்குக் கூட 341 வாக்குகள் கிடைத்தன.
ஜம்மு காஷ்மீர் தொழிலதிபரும் ரஷீத் எம்பியின் நெருங்கிய நண்பருமான சேக் ஆசிக் ஹூசைன் மிக அதிகபட்சமாக 963 வாக்குகளைப் பெற்றார். இவர் போட்டியிட்ட தொகுதியிலும் நோட்டாவுக்கு 1713 வாக்குகள் கிடைத்தன. ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் சர்ஜான் அகமது வகாய், கந்தெர்பால் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பிரிவினைவாத சக்திகளை வாக்காளர்கள் முற்று முழுதாகவே புறக்கணித்துவிட்டனர் என்பதுதான் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்!












Click it and Unblock the Notifications