16,000 மடங்கு வர்த்தகத்தை பெருக்கிய ஜெய்ஷா நிறுவனம்.. டிமானடைசேஷன் முன்பே ஏன் பூட்டு? காங். தாக்கு
டெல்லி: பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாக சரியாக, 4 வாரங்கள் முன்பு அமித்ஷா மகன் ஜெய்ஷா நடத்தி வந்த நிறுவனம் மூடப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார்.
'தி வயர்' இணையதளத்தில், அமித்ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் குறித்து வெளியான செய்திகள் குறித்து ஆனந்த் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
பங்காரு லட்சுமணன் அத்வானி, நிதின்கட்கரி போன்றோர் தங்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தபோது பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். அதைப்போல அமித்ஷாவும் இப்போது செய்ய வேண்டும்.

மோடி மவுனம் கலைக்க வேண்டும்
பிரதமர் இந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார். அவர் உடனடியாக வாய் திறக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எதற்கெடுத்தாலும், ஒவ்வொருவரையாக ராஜினாமா செய்ய கோரி வந்த பாஜக இப்போது வாய் திறக்க முடியாமல் உள்ளது. வியாபம் ஊழல், சஹாரா டைரி, ராமன் சிங் மகன் மீதும், ஆனந்திபென் பட்டேல் மகள் மீதும் புகார்கள் எழுந்தபோதும், மோடி கருத்தே தெரிவிக்கவில்லை.

ரிசர்வ் வங்கி விதிமுறைக்கு எதிரானது
கலுபூர் வணிக கூட்டுறவு வங்கி ரூ.25 கோடியை கடனாக அளித்துள்ளது. இதற்ககு பிணையாக ரூ.6.20 கோடி மதிப்புள்ள இரு சொத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் விதிமுறைக்கு எதிரானது. ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, அதிகபட்ச கடன் தொகை என்பது, அதிகபட்சமாக, பிணை வைக்கும் சொத்தின் மதிப்புக்கு இணையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் 4 மடங்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது அப்பட்டமான விதிமுறை மீறல். ஜெய் ஷா பிணை வைத்த சொத்துக்கள், அமித்ஷா மற்றும் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவுடன் இணைந்து குற்றம்சாட்டப்பட் யஷ்பால் சுடாஸ்மாவுடையது.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறை
ஜெய்ஷாவுக்கு தனி திறமை இருக்க வேண்டும். ஏனெனில் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு நிறுவனத்தை துவங்கிய ஓராண்டிலேயே நினைத்து பார்க்க முடியாத லாபத்தை அது பெற்றுள்ளது. எனவே அது என்ன தொழில் என்பதை அறிய இந்திய மக்களுக்கு உரிமை உள்ளது. வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டது என்ன பொருள், அதை வாங்கியவர்கள் யார், விற்றவர்கள் யார், எந்த நாட்டுக்கு அந்த பொருள் அனுப்பப்பட்டது என்பது குறித்தெல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று தெரிவித்தார் அவர்.

பணமதிப்பிழப்புக்கு முன்பாக
2015ம் ஆண்டு, நிலவரப்படி, ஜெய்ஷா நிறுவனம், 16000 மடங்கு அதிக வர்த்தகம் செய்து 'சாதித்துள்ளது'. அப்படியிருக்கும்போது, ஏன், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவிக்கும் முன்பாக சரியாக 4 வாரங்கள் முன்பு, ஜெய்ஷா நிறுவனம் மூடப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டாக வேண்டும். இவ்வாறு ஆனந்த்ஷர்மா மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications