உ.பி. முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை களமிறக்குகிறது காங்.... பிரியங்கா தலைமையில் பிரசாரம்?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அத்துடன் சோனியா மகள் பிரியங்கா காந்தி தலைமையில் பிரசாரத்தை மேற்கொள்ளவும் காங்கிரஸ் வியூகம் வகுத்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014 லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார வியூகத்துக்கு காரணமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். அதேபோல் கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்-லாலு அணி ஆட்சியைக் கைப்பற்றும் முக்கிய காரணமாக இருந்தது பிரசாந்த் கிஷோரின் வியூகம்தான். தற்போது காங்கிரஸ் கட்சி அவரை வளைத்துள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான களப் பணிகளை காங்கிரஸ் இப்போதே மேற்கொள்ள தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 27 ஆண்டுகாலமாக அங்கே காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. தற்போது சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மிக அதிக இடங்களைக் கைப்பற்றியதால் மத்தியில் எளிதான பெரும்பான்மை பலம் அக்கட்சிக்கு கிடைத்தது. தற்போது இழந்த பலத்தை மீண்டும் பெற காங்கிரஸும் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பிரசாந்த் கிஷோரை களமிறக்கியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
அவரது ஆலோசனைப்படி மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 20 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக இஸ்லாமியர் வாக்குகள் சமாஜ்வாடி கட்சிக்கே போய்க் கொண்டிருக்கிறது. இந்த வாக்குகளை கவருவதற்கான வியூகங்களையும் பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்திருக்கிறாராம்.
அத்துடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக களம் இறக்குவது; பிரியங்கா காந்தி தலைமையில் தீவிர பிரசாரம் மேற்கொள்வது என்ற திட்டங்களையும் செயல்படுத்த ஆலோசனை கூறியிருக்கிறாராம் பிரசாந்த் கிஷோர். இதனால் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.