மும்பை புறப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸுடன் சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
பனாஜி: கோவாவில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அங்கிருந்து மும்பை புறப்பட்டார். மும்பை வரும் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகால சிவசேனா- காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டது பாஜக. சிவசேனாவின் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை போர்க்கொடி தூக்க வைத்து முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரேவை ராஜினாமா செய்ய வைத்தது பாஜக.
உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்த போது பாஜகவின் பட்னாவிஸும் அக்கட்சி எம்.எல்.ஏக்களும் மும்பை சொகுசு ஹோட்டலில் முகாமிட்டிருந்தனர். உத்தவ் தாக்கரே ராஜினாமாவை இனிப்புகள் ஊட்டிவிட்டு கொண்டாடித் தீர்த்தது பாஜக.
இந்நிலையில் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நேற்று முதல் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே கோவா தலைநகர் பனாஜியில் முகாமிட்டுள்ளார். தற்போது பனாஜியில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. மும்பை வரும் ஷிண்டே, பட்னாவிஸை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தரும் கடிதத்துடன் ஆளுநர் கோஷ்யாரியை சந்திக்கிறார். அப்போது பட்னாவிஸும் ஏக்நாத் ஷிண்டேவும் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
பட்னாவிஸ் தலைமையிலான புதிய ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராவார் என கூறப்படுகிறது. இருந்த போதும் பாஜக, சிவசேனா அதிருப்தியாளர்களுக்கான அமைச்சரவை இடங்கள் ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தபப்ட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.