அரசியல் எதிரி தேவகவுடாவை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்த சித்தராமையா.. எல்லாம் காவிரிக்காக
பெங்களூர்: காவிரி பிரச்சினைக்காக முன்னாள் அரசியல் குருநாதரும், தற்போதைய அரசியல் எதிரியுமான முன்னாள் பிரதமர் தேவகவுடாவை நேரில் சந்தித்து ஆலோசித்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மதசார்பற்ற ஜனதாதள கட்சியில், தேவகவுடாவுக்கு வலதுகரமாக, அவருக்கு அடுத்த பிரபலமான தலைவராக விளங்கியவர் சித்தராமையா. ஆனால் பாஜக-ம.ஜ.த கூட்டணி ஆட்சியின்போது, தனது மகன் குமாரசாமியை முதல்வராக்கி அழகு பார்த்தார் தேவகவுடா.
இதனால் உறவை முறித்த சித்தராமையா, காங்கிரசில் இணைந்தார். முதல்வராகுவதை லட்சியமாக கொண்டே காங்கிரசில் இணைந்தார் சித்தராமையா என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல முதல்வர் வேட்பாளராக தன்னையே முன்னிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கெடு விதித்து கட்சியில் இணைந்தார் சித்தராமையா.
அதன்படிதான், சீனியர்கள் இருந்தபோதும், சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக்கி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் சீனியர் தலைவர்களுக்கு சித்தராமையா மீது கோபம் நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. ஆனால், காங்கிரசில் சேர்ந்த ஐந்தே வருடங்களுக்குள் முதல்வராகிவிட்டதால், தேவகவுடா முன்பு காலரை தூக்கிவிட்டு நடந்தார் சித்தராமையா.
இது தேவகவுடாவுக்கு பிடிக்கவில்லை. சித்தராமையாவுக்கு தனது கட்சியினர் மூலம் பல்வேறு நெருக்கடிகளை மறைமுகமாக கொடுத்து பார்த்தார். ஆனால் குருவிடம் படித்த பாடத்தை வைத்து, அத்தனை தாக்குதல்ககளையும் முறியடித்தார் சித்தராமையா.
இப்படியாக ஒரு மோதல் உள்ள நிலையிலும், காவிரி விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசிக்க பெங்களூர் பத்மநாபநகரிலுள்ள தேவகவுடா இல்லத்திற்கு இன்று மாலை சித்தராமையா சென்றார். சித்தராமையா முதல்வரான பிறகு தேவகவுடா இல்லத்திற்கு சென்றது இதுதான் முதல்முறை. பொதுப்பணித்துறை மகாதேவப்பாவும், சந்திப்பின்போது உடனிருந்தார்.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேவகவுடாவிடம் தெரிவித்து அவரது ஆலோசனையை பெறவே சித்தராமையா சென்றார். அனுபவசாலியான தேவகவுடாவின் யோசனை முக்கியம் என்று அமைச்சரவையில் பல அமைச்சர்கள் சித்தராமையாவிடம் தெரிவித்ததாகவும், அதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
சந்திப்புக்கு பிறகு முதல்வர் நிருபர்களிடம் கூறுகையில், நிறைய விஷயங்கள் பேசினோம். அதையெல்லாம் வெளியே தெரிவிக்க முடியாது. காவிரி பற்றிதான் முக்கியமாக விவாதித்தோம். மாலை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தேவகவுடாவையும் பங்கேற்க அழைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.