சித்து திடீர் போர்க்கொடி.. ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி. ஆவதில் சிக்கல்
பெங்களூர்: ப.சிதம்பரத்தை கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்புவதற்கு அமமாநில முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்.பியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ப.சிதம்பரம் கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. மாறாக தோல்வி பயத்தால் தனது மகன் கார்த்தியை நிறுத்தினார். அவர் டெபாசிட் கூட வாங்க முடியாமல் துவண்டு போனார்.
இந்த நிலையில் ப.சிதம்பரம், ராஜ்யசபா உறுப்பினராக ஆர்வம் காட்டி வருகிறார். கர்நாடகத்தில், 4 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 121 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், இரண்டு எம்பிக்களை உறுதியாகவும், ஒரு எம்பியை சுயேட்சைகள், உதிரி கட்சிகள் ஆதரவு மூலம் தேர்வு செய்ய முடியும்.
எனவே ப.சிதம்பரத்தை கர்நாடகத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்ய முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் இதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படாத நிலையில் ப.சிதம்பரத்தை கர்நாடகத்தில் இருந்து தேர்வு செய்வது சரியல்ல என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் ப.சிதம்பரம் கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபைக்குத் தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விடாமல் தனது முயற்சிகளை ப.சிதம்பரம் மேற்கொண்டுள்ளாராம்.