'தேர்தல் சீட்'.. பல கோடிகளுக்கு விற்பனை செய்யும் மாயாவதி: பகுஜன் சமாஜ் தலைவர் குற்றச்சாட்டு!!
லக்னோ: தேர்தலில் போட்டியிடுவோரிடம் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பணம் வசூலிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஜூகுல் கிஷோர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜூகுல் கிஷோர் கூறியுள்ளதாவது:
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்குத்தான் மாயாவதி வாய்ப்பு கொடுக்கிறார். இதனை அனைவருமே நன்கு அறிவார்கள். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
நான் பகுஜன் சமாஜ்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறேன். நான் ஓரங்கட்டப்பட்டிருப்பதற்கான காரணம் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட மாயாவதி பணம் வசூலிப்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
என்னுடைய மகனுக்கு கஸ்தா சட்டசபை தொகுதியில் போட்டியிட நான் சீட் கேட்ட போதுகூட ரூ50 லட்சம் பணம் கேட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை ஓரம்கட்டியுள்ளனர். 1984ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை கன்சிராமுடன் சேர்ந்து உருவாக்கியவன் எனக்கே இந்த கதிதான்.
தற்போதைய எம்.எல்.ஏக்கள், போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் என்னிடம் சீட்டுக்கு பணம் கொடுத்தது பற்றி புலம்பியுள்ளனர். மாயாவதியைப் பொறுத்தவரையில் அவர் தலித்தின் மகளாக இல்லை.. பெரும் சொத்துக்கு அதிபதியாகத்தான் இருக்கிறார்.
மாயாவதி தற்போது பல அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளார். இவை அனைத்துமே மாயாவதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது.
இவ்வாறு ஜூகுல் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக- சமாஜ்வாடி கோரிக்கை
இதனிடையே ஜூகுல் கிஷோர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சமாஜ்வாடி கட்சியின் கவுரவ் பாட்டியா இது குறித்து கூறுகையில், தேர்தலில் போட்டியிடுவோரிடம் மாயாவதி பணம் வசூலித்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
முன்னதாக லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் பீகார் மாநில பொறுப்பாளராக ஜூகுல் கிஷோர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்தவாரம் அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் ஜூகுல் கிஷோர் விடுவிக்கப்படுவதாக மாயாவதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.