விவாகரத்து பெற்ற பெண்ணை போல வாழ்க்கையை நடத்தினார் சீதா பிராட்டி.. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு
சிம்லா: தற்போதைய காலத்தில் விவாகரத்து பெற்ற பெண்கள் வாழும் வாழ்க்கையை போலத்தான் சீதா பிராட்டி வாழ்ந்து வந்ததாக மத்திய பிரதேச பாஜக அமைச்சர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுதியுள்ளது. உடனடியாக மோகன் யாதவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார்.
இவரது தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் மோகன் யாதவ்.

சீதா பிராட்டியின் வாழ்க்கையை ஒப்பிட்டு
மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை உஜ்ஜைன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மோகன் யாதவ், தற்போது விவாகரத்து ஆன பெண்கள் வாழ்க்கையோடு சீதா பிராட்டியின் வாழ்க்கையை ஒப்பிட்டு பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பாஜக அமைச்சரே இப்படி பேசியிருப்பது இந்துத்வா அமைப்புகளையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது தொடர்பாக மோகன் யாதவ் பேசியதாவது:-

ராமரின் வாழ்க்கைக்காக பிரார்த்தனை
"கடுமையான இன்னல்களை சந்தித்த போதும், சீதை தனது கணவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தனது கஷ்டங்களை மறந்து கடவுள் ராமரின் வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்தார். தற்போதைய காலத்தில், இந்த வாழ்க்கை சீதா பிராட்டியின் வாழ்க்கை விவாகரத்து ஆனதற்கு பிறகான பெண்களின் வாழ்க்கைக்கு ஒப்பானது" என்றார். இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை குறித்து பாஜக அமைச்சரே இப்படி பேசியது பெரும் சர்ச்சையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்படி பேசலாமா
இந்துக்களின் பாதுகாவலர்கள் போல தங்களை காட்டிக்கொள்ளும் பாஜகவினரே இப்படி பேசலாமா என்றும் சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியும் அமைச்சர் மோகன் யாதவ் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவரான திக் விஜய் சிங், மோகன் யாதவை அமைச்சர் பொறுப்பில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்
இது தொடர்பாக அவர் தனது ட்விட் பதிவில் கூறுகையில், "சீதா மாதா மற்றும் ராமர் மீது உங்களுக்கு சிறிதளவு நம்பிக்கை மற்றும் பக்தி இருந்தால் மோகன் யாதவை உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குங்கள். ராமரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும்.. பஜ்ரங் தள் அமைப்பினரும் தற்போது எங்கே ஒளிந்து இருக்கிறீர்கள்? மோகன் யாதவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

விகாஸ் திவ்யகீர்த்தி
முன்னதாக கடந்த மாதம் டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் ஆசிரியர் விகாஸ் திவ்யகீர்த்தி என்பவர் சீதை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது. சமஸ்கிருத எழுத்தாளரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசிய விகாஸ் திவ்ய கீர்த்தி, 'நாய் அசுத்தப்படுத்திய நெய்' என்று சீதை குறித்து பேசியது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications