17 பேரை பலிகொண்ட மும்பை கட்டட விபத்து: சிவசேனா தலைவர் அதிரடி கைது
மும்பை காட்கோபர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 17 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சி பிரமுகர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை காட்கோபர் பகுதியில் உள்ள 4 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து நேற்று விபத்து ஏற்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 17 பேர் பலியாகினர். இந்த கோர விபத்து தொடர்பாக சிவசேனா கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து மகாராஷ்டிர மாநிலத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடத்தை மேலும் புதுப்பிக்கும் வேலை கடந்த சில நாட்களாக நடந்துள்ளது. இதில், 35 ஆண்டுகால கட்டடமான அது இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிவசேனா கட்சியின் பிரமுகர் சுனில் சிதப் என்பவரைக் கைதுசெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டட விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 60-க்கும் மேற்பட்ட தேசிய மீட்புப் படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பலியான முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்தது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான கட்டடத்தில், கீழ் தளத்தில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் புரனமைப்பு பணிகள் நடைபெற்றதில் கட்டிடம் பலவீனம் அடைந்ததாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு மும்பை மேயர் விஸ்வநாதன் மகாதேஸ்வர் விரைந்து வந்தார். இதனிடையே, இந்த கட்டிட விபத்து தொடர்பாக சிவசேனா தலைவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், விபத்து நடந்த இடத்தில் நேரில் பார்வையிட்ட முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 15 நாட்களில் அறிக்கை தாக்க செய்ய மும்பை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.