அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா?: இ.சி. பதில்
டெல்லி: பிரச்சாரக் கூட்டத்திற்கான செலவு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகரித்துள்ளது தொடர்பாக அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். அவர் பிரச்சாரம் செய்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக செலவு செய்யப்பட்டது என்ற புகார் எழுந்தது. இதையடுத்து ஸ்மிருதி இரானி தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில்,
ஸ்மிருதி இரானி உள்பட அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கை இனி தான் எங்களுக்கு வந்து சேரும். அந்த அறிக்கை தேர்தல் முடிவுகள் வெளியிட்ட 30 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் பிறகே தேர்தல் செலவு குறித்து பரிசீலிக்கப்படும். அதனால் ஸ்மிருதி இரானி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்பதை தற்போதைக்கு கூற முடியாது என்றது.
அமேதி தொகுதியில் தான் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.