ரூ15 லட்சத்திற்கு 7ஆண்டுகள் காத்திருக்கிறோம்.. 30 நிமிடங்கள் வெயிட் பண்ண முடியாதா? திரிணாமுல் எம்பி
கொல்கத்தா: பிரமதர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ரூ 15 லட்ச ரூபாய்க்காக 7 ஆண்டுகளும் தடுப்பூசிக்காககவும் பொதுமக்கள் பல மாதங்களும் காத்திருப்பதால் நீங்களும் சற்று நேரம் காத்திருக்கலாம் எனப் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.
Recommended Video
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் கடந்த 26ஆம் தேதி மேற்கு வங்கம் ஒடிசா இடையே கரை கடந்தது. இந்தப் புயல் காரணமாக மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
யாஸ் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார். மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகளைப் பார்வையிட்ட மோடி, அதைத் தொடர்ந்து அங்கு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
30 நிமிட காத்திருப்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி சுமார் அரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வந்த மம்தா, யாஸ் புயலால் ஏற்படச் சேதங்கள் குறித்த அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு பிரதமருடன் தனியாக ஆலோசனை செய்துவிட்டு மீண்டும் புறப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
உச்சக்கட்ட மோதல்
இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் மேற்கு வங்க தலைமைச் செயலர் ஆலன் பந்தோபத்யாய் திடீரென பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். மத்திய அரசின் குறைதீர்க்கும் நலன் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள அவர், வரும் 31ஆம் தேதி புதிய பணியில் சேர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையேயான பணிப்போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
7 ஆண்டுகள் காத்திருக்கிறோம்
இந்நிலையில் இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "30 நிமிட காத்திருப்பிற்கு இவ்வளவு குழப்பம் ஏன்? இந்தியர்கள் ரூ 15 லட்சத்திற்கு 7 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். ஏடிஎம் வரிசையில் மணிநேரம் காத்திருக்கிறார்கள். தடுப்பூசிகளுக்காக மாதங்கள் காத்திருக்கிறார்கள். கொஞ்ர நேரம் நீங்களும் காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது ட்வீட்டர் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
பாஜக தாக்கு
ஆனால், மேற்கு வங்க தலைவர்கள் மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் செயல்பாடு மிக மோசமாக இருந்தாக உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். மம்தாவின் செயல் அதிர்ச்சியூட்டும் வகையிலும் வேதனை தரும் வகையிலும் உள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மம்தாவின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவதற்கு ஆபத்தானது என்று விமர்சித்துள்ளார்.