எதிர்ப்பை மீறி சோலோகாமி! தன்னை தானே திருமணம் செய்த குஜராத் இளம்பெண்! எப்படி நடந்தது தெரியுமா?
காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் 24 வயது இளம்பெண் ஷாமா பிந்து அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே ‛சோலோகாமி' எனும் தன்னைத்தானே மணந்து கொள்ளும் திருமணத்தை பாரம்பரிய முறைப்படி மெஹந்தி நிகழ்ச்சியுடன் செய்து கொண்டார். இதன்மூலம் இந்தியாவில் முதல் முறையாக ‛சோலோகாமி' திருமணம் நடந்துள்ளது.
Recommended Video
வெளிநாடுகளில் மணமகன், மணமகள் இன்றி தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் ‛சோலாகாமி' திருமண முறை நடைமுறை உள்ளது. இது சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் பலபேர் இதனை செய்து வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 3-வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு
பொதுவாக எதிர்பாலினம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இத்தகைய திருமணம் செய்கின்றனர். மேலும் தன்மீது சுயகாதல், சுய அங்கீகாரம் ஆகியவற்றை வெளியுலகிற்கு கூறும் வகையில் இதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் ‛சோலோகாமி’
இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ‛சோலோகாமி' திருமணம் செய்ய குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ஷாமா பிந்து (வயது 24) பெண் முடிவு செய்தார். இவர் சோசியாலஜி பட்டப்படிப்பை மடித்து தற்போது தனியார் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மணமகன் இன்றி ஜூன் 11ல் ‛சோலோகமாமி' திருமணத்தை செய்ய முடிவு செய்தார். ஆண் ஒருவரை திருமணம் செய்ய விருப்பம் இல்லாத நிலையில் மணப்பெண் கோலத்தில் மணமேடையில் அமர ஷாமா பிந்து விரும்பும் நிலையில் அவர் இத்தகையை முடிவை எடுத்தார்.
கோவிலில் நடத்த எதிர்ப்பு
இந்த திருமணத்தை ஹசாரியில் உள்ள ஹரிஹரேஷ்வர் மகாதேவ் கோவிலில் வெகுவிமரிசையாக நடத்த திட்டமிட்ட அவர் அதற்கான ஏற்பாடுகளை துவக்கினார். இந்நிலையில் தான் பாஜகவில் எதிர்ப்பு கிளம்பியது. வதோதரா பாஜக நகர துணை தலைவர் சுனிதா சுக்லா, ‛‛சோலோகாமி திருமணத்தை கோவிலில் நடத்த அனுமதிக்க மாட்டோம். இது இந்து மதத்துக்கு எதிரானது. இத்தகைய திருமணத்தால் இந்துக்களின் மக்கள்தொகை குறையும்'' என்றார். மேலும் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இடம் மாற்ற முடிவு
இந்நிலையில் ஷாமா பிந்து தனது முடிவை மாற்றினார். ‛‛நான் யாருடைய மதத்தையும், நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை. இதனால் திருமண இடத்தை மாற்ற விரும்புகிறேன். இருப்பினும் சோலோகாமி திருமணத்தை நிச்சயம் செய்வேன். இந்த முடிவை யாருக்காகவும் விட்டு தர மாட்டேன்'' என தெரிவித்து இருந்தார்.
திருமணம் செய்து கொண்ட இளம்பெண்
இந்நிலையில் தான் திடீரென்று ஷாமா பிந்து அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பாக நேற்றே தனது வீட்டில் வைத்து தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். மெஹந்தி, மஞ்சள் பூசும் விழா உள்பட அவரது பாரம்பரிய வழக்கபடி சடங்குகள் நடத்தப்பட்டது. இதையடுத்து ஷாமா பிந்து தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்து தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார்.
40 நிமிட விழா
இந்த விழாவில் அவரது நெருங்கிய தோழிகள் மற்றும் உடன் பணியாற்றும் நபர்கள் என 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழா வெறும் 40 நிமிடத்தில் முடிவடைந்தது. திருமணத்துக்கான மந்திரங்கள் டேப் ரெக்கார்ட் மூலம் இசைக்கப்பட்டது. கழுத்தில் மாலை அணிந்து நெற்றியில் குங்குமம் சூடி மணப்பெண்ணாக மாறி ஷாமா பிந்து தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார்.
பிரச்சனையை தவிர்க்க...
இதுபற்றி ஷாமா பிந்து கூறுகையில், ‛‛இறுதியாக திருமணமான பெண்ணாக உணர்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. சோலோகாமி திருமணம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அறிவித்த தேதியில் விழா நடத்தினால் பிரச்சனைகள் ஏற்படலாம் என நினைத்தேன். இதனால் 3 நாட்களுக்கு முன்பே தோழிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்'' என்றார்.
கோவாவுக்கு ஹனிமூன்
மேலும் அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛சோலோகாமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் எனது உணர்வை புரிந்து வாழ்த்துகள் தெரிவித்தனர். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக திருமணத்துக்கு பிறகு கோவாவுக்கு ஹனிமூன் செல்ல உள்ளேன் என அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.