போலீஸ் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தால் அழகான பெண்களுக்கு பாதுகாப்பு.. சொல்வது சோம்நாத் பார்தி
டெல்லி : காவல் துறை எங்கள் கட்டுப்பாட்டில் வந்தால், அழகான பெண்கள் இரவிலும் செல்லும் வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறிய ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சோம்நாத் பார்தியின் கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது.
டெல்லியில் அதிகாரம் யார் கையில் என்பது குறித்து ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இது குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குடியரசுத் தலைவரை சந்தித்துக் கூட முறையிட்டார். இதற்கெல்லாம் அசராத மத்திய பா.ஜ.க. அரசு காவல் துறையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் ஆளுநர் வரம்பில் தான் இருக்கும் என்றும், அத்துறையை மாநில அரசிடம் ஒப்படைக்க முடியாது என்றும் மறுத்துவிட்டது.
முதலமைச்சர், ஆளுநர் இடையே அதிகாரப் போட்டி நீடித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சர் சோம்நாத் பார்த்தி கூறிய கருத்து தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
டெல்லி சட்ட சபையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனையின் போது பேசிய சோம்நாத் பார்தி காவல் துறை எங்கள் கட்டுப்பாட்டில் வந்து விட்டால் அழகான பெண்கள் நடு இரவிலும் கூட வெளியில் செல்லும் வகையில் முழு பாதுகாப்பு வழங்குவோம் என்று கூறினார்.
பெண்கள் குறித்த அவரது கருத்துக்கு காங்கிரஸ், பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி இது போன்ற பெண்களுக்கு எதிரான கருத்து மிகவும் அருவருக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
சோம்நாத்தின் கருத்து பற்றி பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா, இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், முதலமைச்சர் முன்னிலையில் இந்த கருத்தை சோம்நாத் பேசிய போது அதனை ஏன் அரவிந்த் கெஜ்ரிவால் தட்டிக்கேட்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதே சோம்நாத் பார்தி மனைவியை சித்ரவதை செய்த புகாரில் சிக்கியவர்; தம்மை நாயை ஏவிவிட்டு கடிக்கவிட்டார் சோம்நாத் பார்தி என மனைவி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.