சத்தீஸ்கரில் ஆசிட் வீச்சுக்குள்ளான சோனி சோரிக்கு டெல்லியில் தீவிர சிகிச்சை...கண்களில் பாதிப்பு இல்லை
டெல்லி: சத்தீஸ்கரில் போலீசாரின் போலி என்கவுண்ட்டரை அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி சோனி சோரி ஆசிட் தாக்குதலுக்குள்ளானார். தற்போது சோனி சோரிக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட் வீச்சில் அவர் கண்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதி பஸ்தார். இங்கு பழங்குடி இனத்தவர்கள்தான் அதிகம். மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதாக கூறிக் கொண்டு அப்பாவி பழங்குடி மக்களை போலீசார் சுட்டுக் கொல்கின்றனர் என்பது நீண்டகால குற்றச்சாட்டு.
அத்துடன் போலீசுக்கு ஆதரவாக முன்னர் சல்வாஜூடும் என்ற அமைப்பு இருந்தது போல தற்போது புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு போலீசாரின் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்துவோர் மிரட்டப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தியிருக்கிறது சோனி சோரி மீதான ஆசிட் வீச்சு.
பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டு ஒருவரை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதாக போலீஸ் ஐஜி கலூரி அறிவித்திருந்தார். ஆனால் இது போலி என்கவுண்ட்டர் என்றும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி ஒருவரை காட்டுக்குள் அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றதாகவும் சோனி சோரி அம்பலப்படுத்தினார். ஆம் ஆத்மி கட்சி நிர்வாகியாக உள்ள சோனி சோரி, பழங்குடி மக்களுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருபவர்.
போலீசாரின் போலி என்கவுண்ட்டரை அம்பலப்படுத்திய மறுநாள் அமிலம் போன்ற மர்ம பொருள் ஒன்றால் சோனி சோரி தாக்கப்பட்டிருக்கிறார். இதில் அவரது முகம் கடுமையான பாதிக்கப்பட்டது.
இந்த கொடூர தாக்குதலுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சோனி சோரி உடனடியாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிட் வீச்சில் சோனி சோரியின் முகம் சுருங்கி, கருப்பாகி போயுள்ளது. அவரது கண்கள் ஆசிட் வீச்சில் இருந்து தப்பியுள்ளன. தற்போது உறவினர்களிடம் நன்றாக சோனி சோரி பேசினாலும் தன்னுடைய குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என அச்சத்தை தெரிவித்திருக்கிறார்.
சோனி சோரி மீது தாக்குதல் நடத்தியது போலீசால் ஆதரவாளர்கள்தான்; அவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று கேஜ்ரிவால் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.