சோனியா, ராகுலுக்கு அடுத்த நெருக்கடி- வருமான வரித்துறை நோட்டீஸ்!
டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.
ஜஹவர்லால் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அப்போது அந்த பத்திரிகைக்கு இருந்த கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டவிரோதமாக சோனியா, ராகுல் ஆகியோர் பணம் கொடுத்தனர்; அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ2 ஆயிரம் கோடி சொத்து அபகரிக்கப்பட்டது என்பது புகார்.
இது தொடர்பாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி அண்மையில் சோனியா, ராகுலுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி, சொத்துகளை பரிமாற்றம் செய்த போது பெற்ற வருமான வரி விலக்கு ஆகியவை குறித்தும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்தே சோனியா, ராகுல் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நேஷனல் ஹெரால்டில் வருமான வரி மீளாய்வு தொடர்பாகவும், சொத்துக்களை பரிமாற்றம் செய்த போது வருமான வரி விலக்குப் பெற்றதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், சோனியா மற்றும் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே, நேஷனல் ஹெரால்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்பட மூத்த தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிலையில், பத்திரிக்கையின் சொத்துக்களை வாங்க கட்சி நிதியைப் பயன்படுத்தியதாக சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் இருவருக்கும் சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.