மக்களிடம் போலியான கனவுகளை விற்று வருகிறார் மோடி.. சோனியா தாக்கு
டெல்லி: டெல்யிலில் நடந்த மகிளா காங்கிரஸ் மாநாட்டில் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆற்றிய உரை வசீகரிப்பதாக இருந்தாலும் கூட மாநாட்டோடு நின்று விடாமல் கட்சியை மீண்டும் புத்துணர்வோடு செயல்படுத்த காங்கிரஸார் முனைவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மோடி அரசை சரமாரியாக விமர்சித்துப் பேசினார் சோனியா காந்தி.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போதே மோடியின் பேச்சுக்களுக்கும், புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் சரிவர பதிலளிக்காமல், மெத்தனமாகவும், மந்தமாகவும், கூடுதல் நம்பிக்கையோடும் காங்கிரஸ் இருந்து விட்டதை அனைவருமே அறிவர். இதுதான் காங்கிரஸின் படுதோல்விக்கு முக்கியக் காரணம்.
அதிகம் நம்பப்பபட்ட ராகுல் காந்திதான் மிகப் பெரிய அளவில் சொதப்பினார். கூடுதலாக, மணிசங்கர அய்யர் போன்றோர் எரிந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றி காங்கிரஸுக்கு மேலும் பல பின்னடைவுகறை ஏற்படுத்தினர்.
தற்போது தோல்விக்குப் பின்னர் கட்சியைக் குணப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது காங்கிரஸ். அதில் ஒன்றாக மகிளா காங்கிரஸ் மாநாட்டை டெல்லியில் நடத்தியது. ஆனால் இங்கும் வந்து மோடியைக் கடலில் தள்ளுவோம் என்று தேவையில்லாமல் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சோனியா உரை
மகிளா காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தியின் உரை பலரைக் கவர்வதாக இருந்தது. சோனியா காந்தியின் உரையில் இடம் பெற்றவை குறித்த ஒரு தொகுப்பு...
திட்டங்களைத் திருடும் பாஜக
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படு்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும் தற்போதைய மத்திய அரசு முந்தைய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி தம்முடைய திட்டம் போன்று செயல்படுத்தி வருகிறது.
ஒற்றுமை தேவை
மத்திய அரசை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றுவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இதன்படி ஒற்றுமையுடன் செயல்படும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் , அதற்காக அதி காலம் காத்திருக்க தேவையிருக்காது.
மகளிர் இட ஒதுக்கீடு
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா விவகார நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் ஒரு போதும் பின் வாங்காது. நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதா விரைந்து நிறைவேற்றும் படி தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் கட்சி நிர்பந்தம் அளிக்கும்.
மக்கள் ஏமாந்து விட்டனர்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் மக்களவைத் தேர்தலின்போது சில நபர்கள் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி, அவர்களின் வலையில் மக்கள் விழுந்து விட்டனர். பொய்யான வாக்குறுதிகளை அளித்த நபர்கள் வெற்றி பெற்று விட்டனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது.
திட்டம் இல்லாத மோடி
தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கென்று எந்தவொரு திட்டமும் இல்லை.
ராஜீவ் காந்தியே காரணம்
பஞ்சாயத்துகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளித்தது, மகளிருக்காக தேசிய ஆணையம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு மகளிர் நலத் திட்டங்களை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி செயல்படுத்தியுள்ளார். நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார்.
நிலைப்பாட்டில் பின்வாங்காது
தற்போது காங்கிரஸ், எதிர்க்கட்சியாக உள்ளது. எனினும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் பின்வாங்கிச் செல்லாது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து நிறைவேற்றும்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு அளவில் நிர்ப்பந்தம் தரும்.
மகளிர் கொடுமையை எதிர்த்து போராடுங்கள்
மகளிருக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டால், காங்கிரஸ் மகளிர் பிரிவினர் பெரிய அளவில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காவல்நிலையங்கள், நீதிமன்றங்களில் மகளிருக்கு நியாயம் கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
போலி கனவுகளை விற்கும் மோடி
நரேந்திர மோடி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டு மக்களுக்கு போலியான கனவுகளை விற்று வருகிறது.
உறுதியுடன் இருப்போம்
தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை என்றும், வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் ஒரு அங்கம் என்றும், கொள்கையில் உறுதியாக இருப்பதுதான் முக்கியம் என்றார் சோனியா காந்தி.