முல்லைப் பெரியாறு அணை: சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்டுகிறது கேரளா
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகராம் தொடர்பாக விவாதிக்க ஜூன் 8-ந் தேதியன்று கேரளா சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கடந்த 7-ந்தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அணையின் நீர்மட்ட உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், இது தொடர்பாக சட்டசபையில் கேரள அரசு கொண்டு வந்த அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் கூறியது.

இந்த நிலையில் தீர்ப்பு வெளியான அன்றே முதல்வர் உம்மன் சாண்டி, அமைச்சரவை கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடனடியாக கேரள அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று உம்மன் சாண்டி நேற்று முன்தினம் இரவு அனைத்துக் கட்சி கூட்டத்தை திருவனந்தபுரத்தில் கூட்டியிருந்தார். இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது எனவும், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்க கேட்டுக்கொள்வது என்றும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதுதான் பாதுகாப்பானது கேரள முதல்வர் சாண்டி கூறினார். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகராம் தொடர்பாக விவாதிக்க கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் ஜூன் மாதம் 8ந் தேதி நடைபெறும் என்று கேரளா மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications