ஐ.என்.எஸ் விராட் கப்பலின் பாய்லர் அறையில் தீ- ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
பனாஜி: கோவா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ் விராட் போர்க் கப்பலின் பாய்லர் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ஊழியர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று மதிய அளவில் தினசரி பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது அக்கப்பலின் பாய்லர் அறை ஒன்றிலிருந்து வெளியான அதிக வெப்பம் காரணமாக கப்பல் தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவ ஆரம்பித்ததால் அதனை கட்டுப்படுத்த 4 மாலுமிகள் முயன்றனர். இந்நிலையில் அளவுகடந்த வெப்பப் புகை உடலைத் தாக்கியதால் அவர்கள் படுகாயமடைந்தனர்.
இதில் தலைமை பொறியாளரான அஷ்ஷூ சிங் படுகாயமடைந்ததுடன், புகையின் தாக்கத்தால் மூச்சுத்திணறலுக்கும் உள்ளானார். உடனடியாக கோவாவின் கப்பல்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மற்ற மூவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாய்லர் அறையில் தீயை தோற்றுவிக்கும் சில பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததே இந்த விபத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தால் விராட் விரைவில் மும்பை திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் நேவி என்று அழைக்கப்படும் இங்கிலாந்து கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்மிஸ் என்ற பெயரில் 1959ம் ஆண்டு சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை, கடந்த 1987ம் ஆண்டு இந்தியா வாங்கியது. அதனை ஐஎன்எஸ் விராட் என்ற பெயரில் இந்திய கடற்படை சேவையில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.