கேரள அரசின் ஆயுர்வேத மருத்துவ விளம்பர தூதராக ஸ்டெபி கிராப் நியமனம்!
ஸ்டெபி கிராபை நினைவிருக்கிறதா... ஒரு காலத்தில் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாகக் கலக்கியவர்.
இப்போது கேரள அரசின் ஆயுர்வேத மருத்துவத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எண்பது மற்றும் தொன்னூறுகளில் டென்னிஸ் உலகில் பரபரப்பாக விளையாடிய ஸ்டெபி 107 போட்டிகளில் பட்டங்களை வென்றவர். அவற்றில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் அடங்கும். ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்க குடியுரிமை பெற்று செட்டிலாகிவிட்டார்.

1999-ல் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் சில காட்சிப் போட்டிகளில் மட்டும் விளையாடினார். கணவர் ஆன்ட்ரி ஆகாஸியுடன் லாஸ் வேகாஸில் வசிக்கும் ஸ்டெபி, சில சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இப்போது கேரள அரசு அவரை ஆயுர்வேத மருத்துவத்துக்கு தூதராக நியமித்துள்ளது.
இன்று அமைச்சரவை கூடியபோது இம்முடிவு எடுக்கப்பட்டதாக கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தகவல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஸ்டெபி கிராப்பிடம் பேசி ஒப்பந்தம் செய்ய கேரள சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாத் துறையின் 'விசிட் கேரளா' என்கிற திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும். இந்தத் திட்டம் தொடர்பாக, கேரள சுற்றுலாத்துறை ஸ்டெபி கிராப்பிடம் முன்பே பேசி, சம்மதம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications