குஜராத் தேர்தல்: இழுபறிக்கு வேட்பாளர்களை அறிவித்த பா.ஜ.க.. காங்கிரஸ் எப்போது ?
குஜராத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க
காந்திநகர் : குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கடும் இழுபறிக்குப் பிறகு பா.ஜ.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
குஜராத்தில் வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதியும், 14ம் தேதியும் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இதுவரை அங்கு 5 முறை வெற்றி பெற்று 22 ஆண்டுகள் ஆட்சி செய்து வலுவான நிலையில் இருக்கிறது பா.ஜ.க. ஆனால், அங்கு தற்போதூ பட்டேல் இன மக்கள் போராட்டம், தலித் மக்களுக்கு எதிரான வன்முறை, தவறான பொருளாதார அணுகுமுறையால் பா.ஜ.க ஓட்டு வங்கி சிதறி இருப்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது.
இந்த இடத்தை பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.க அதிருப்தியாளர்கள் தன்வசம் கொண்டுவந்து இந்த முறை வெற்றியை ருசிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர் பட்டியல் எங்கே ?
இந்நிலையில் தேர்தலுக்கு 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை இதுவரை அறிவிக்கவில்லை. தொடர் வெற்றிகளைப் பெற்று இருந்தாலும் பா.ஜ.க தன்னுடைய வேட்பாளர்கள் குறித்த நிலையான முடிவுக்கு வரவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் நிலை?
ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் பலரும் தங்களுக்கு சீட் கிடைக்குமா, கிடைக்காதா என்கிற எண்ணத்தில் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு தேர்தலில் 47 எம்.எல்.ஏ.,களுக்கும், 2012ம் ஆண்டு தேர்தலில் 30 சிட்டிங் எம்.எல்.ஏ.,களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதே அவர்களின் கவலைக்கு காரணம்.
முதல் வெற்றிக்கு காங்.,
எப்படியாவாது ஆறாவது முறையும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கும் பா.ஜ.க பல்வேறு வகைகளில் வேட்பாளர் குறித்து யோசித்து வருகிறது. அதுபோல, காங்கிரஸும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பா.ஜ.க முதலில் அறிவிக்கட்டும் என்று காத்திருப்பதாகத் தெரிகிறது.
பா.ஜ.க.வின் திட்டம்
ஆனால், பா.ஜ.க.,வோ காங்கிரஸ் அறிவித்த பின்பு அதற்கு ஏற்றார்போல, சிறப்பாகச் செயல்படும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக 3 பட்டியலைத் தயாரித்து வைத்துள்ளது. ஹிமாச்சல், உத்திர பிரதேச தேர்தலிலும் பா.ஜ.க இதே யுக்தியைத் தான் பயன்படுத்தியது. அதில் உ.பி.,யில் வெற்றியும் கிடைத்தது.
கட்சிகளுக்கு இடையே போட்டி
ஆனால், இந்த தாமதம் சில முறைக்கேடுகளுக்கும் வழிவகுப்பதாக கட்சித் தொண்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களிடம் பேசி சீட் வாங்கித் தருவதாக சிலர் காசு பார்த்து வருவதாகவும் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எது எப்படியோ இரண்டு கட்சித்தலைமைகள் நீயா? நானா ? போட்டியில் ஆழ்ந்து இருப்பதால், வேட்பாளர்கள் ஆகும் ஆசையில் இருப்பவர்கள் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.
பா.ஜ.க.ம்வின் வேட்பாளர்கள்
கடும் இழுபறிக்குப் பிறகு தற்போது பா.ஜ.க தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. முதற்கட்ட பட்டியலில் 70 வேட்பாளர்கள் பெயர் வெளியாகி உள்ளது. பா.ஜ.க.,வைத் தொடர்ந்து நாளையோ, நாளை மறுநாளோ காங்கிரஸ் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.