"இரட்டை இலை": தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு முட்ட முட்ட மது விருந்து.. அளித்தது யார் தெரியுமா?
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் 10 அதிகாரிகளுக்கு டெல்லியில் 5 நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் தடபுடலான விருந்து கொடுத்த விவரம் வெளியாகியுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு சாதகமாக கிடைக்கச் செய்வதற்காக, டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு மதுவுடன் ஆடம்பரமான விருந்தை சுகேஷ் சந்திரசேகர் அளித்துள்ளராம்.
தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் தனக்கு சாதகமான தீர்ப்பு வர அதிகாரிகளை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க தினகரன் முடிவு செய்தார்.
இதற்கு அவருக்கு கிடைத்த நபர்தான் சுகேஷ். அவர் மூலம் 60 கோடி ரூபாய் பேரம் பேசி ஒரு கட்டப் பணத்தைக் கொடுத்த நிலையில் அத்தனை பேரும் சிக்கியுள்ளனர்.
தொலைபேசி உரையாடல்கள்
இதைத் தொடர்ந்து சுகேஷை கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில் தினகரனிடம் இருந்து ரூ.10 கோடி ஹவாலா பணம் பெற்றதாக வாக்குமூலம் அளித்தார். ஆனால் அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இருவரின் தொலைபேசி உரையாடல்களையும் டெல்லி போலீஸார் ஆய்வு செய்தனர்.
பலமுறை பேச்சு
இதில் கடந்த 15-ஆம் தேதி சுகேஷை தினகரன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதையொட்டி டெல்லி போலீசார் டி.டி.வி. தினகரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருந்தனர். கைதான சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணம் கிடைத்தது எப்போது ?
இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுக்க டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் 10 நாள்கள் சுகேஷ் அறைஎடுத்து தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவருக்கு கடந்த 15-ஆம் தேதி பணம் கிடைத்துள்ளது. அதாவது இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் ரூ.10 கோடி கிடைத்துள்ளது. அதில் 1.3 கோடி மட்டும் கைப்பற்றப்பட்டது. மீதமுள்ள ரூ. 8.7 கோடி பணம் மாயமாகி உள்ளது.
ஹோட்டலில் குடி.. ஆட்டம்
டெல்லி நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் தங்கி இருந்த போது தேர்தல் ஆணையத்தை சேர்ந்த 10 அதிகாரிகள் அவரை சந்தித்தனர். இரட்டை இலை சின்னம் பெற்று தருவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகளை சந்தித்த சுகேஷ் அந்த அதிகாரிகளுக்கு மதுவுடன் கூடிய ஆடம்பரமான விருந்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது.