சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு – அவிழ அவிழ மிரட்டும் முடிச்சுகள்
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் மேலும் மேலும் பல மர்மங்கள் அதிகரித்து வருகின்றன. முரண்பாடான கருத்துக்கள், பல விதமான மருத்துவ அறிக்கைகள், பல்வேறு அறிக்கைகள் இந்த வழக்கை மேலும் மேலும் குழப்பமாக்கி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளன. டெல்லி போலீஸாருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது சுனந்தா கொலை வழக்கு விசாரணை.
உறவு கசந்ததா இல்லையா:
சசி தரூர், சுனந்தா இடையிலான உறவு குறித்துத்தான் முக்கிய பார்வை விழுந்துள்ளது. அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை குறித்து பல கருத்துக்கள் கிளம்பியுள்ளன.

சசி தரூர் வீட்டு வேலைக்காரர் நரேனிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியபோது கேத்தி என்ற பெயரை அவர் கூறியுள்ளார். சசி தரூர், சுனந்தா இடையே சண்டை மூள்வதற்கு இவர்தான் காரணம் என்றும் நரேன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சுனந்தாவுக்கு அவரது மரணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு முழங்கால் வலிக்கான சிகிச்சையைக் கொடுத்துள்ளனர். அவர்களது கருத்தின்படி கணவர் மனைவிக்கு இடையே மோதல் இருந்துத போல தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
கேரள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சுனந்தாவின் மரணத்திற்குப் பின்னர் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை நடந்ததாக கூறியிருந்தனர்.
அதேசமயம் சில காங்கிரஸ் தலைவர்கள், கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருந்ததாக கூறியுள்ளனர்.
கேத்தி, சுனில் சாப்:
நரேனிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது இந்த இரு பெயர்கள் குறித்தும் தெரிய வந்தன. சுனந்தா, சசி இடையே சண்டை மூள கேத்திதான் காரணம் என்பது நரேனின் வாக்குமூலமாகும்.
கேத்திக்காக துபாயில் ஒருமுறை சசி - சுனந்தா சண்டை போட்டதாக நரேன் கூறியுள்ளார். அதேபோல பல இடங்களில் கேத்தி தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக அவர் கூறியுள்ளார்.
சுனில் சாப் என்பது சுனில் தாக்கரு என்று தெரிய வந்துள்ளது. இவர் சசி, சுனந்தா குடும்ப நண்பராம். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் சுனந்தா எப்படி இறந்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என்று கூறி விட்டாராம்.
தரூரிடம் விரைவில் விசாரணை:
இதற்கிடையே, அடுத்த வாரம் சசி தரூர் டெல்லி வரும்போது அவரிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது நரேன் வாக்குமூலத்தை வைத்து அவரிடம் கேள்வி கேட்கப் போகின்றனராம்.
மேலும் கேத்தி குறித்தும் சசியிடம் கேட்கப்படவுள்ளது. டெல்லி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று ஏற்கனவே சசி கூறியுள்ளார்.
கிம்ஸ் அறிக்கை:
மேலும் கிம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக கிம்ஸ் மருத்தவமனையிடம் அறிக்கை பெறப்படவுள்ளது. சுனந்தாவுக்கு உயிராபத்து ஏற்படுத்தக் கூடிய எந்த நோயும் உடலில் இல்லை என்று ஏற்கனவே கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அவருக்கு சீரியஸான பிரச்சினை இல்லை என்றும் கூறியுள்ளனர். அப்படி இருந்திருந்தால் நாங்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கவே மாட்டோமே என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மன அழுத்தம் தொடர்பாக தாங்கள் எந்த மருந்தையும் அவருக்குப் பரிந்துரைக்கவில்லை என்றும் கிம்ஸ் டாக்டர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications