கேரள பாதிரியார்கள் பலாத்கார குற்றவாளிகளாக மாறுவது ஏன்? உச்ச நீதிமன்றம் காட்டம்
கேரளாவில் பாதிரியார்கள் பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகளாகிறார்களா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Recommended Video
டெல்லி: கேரளாவில் என்ன நடக்கிறது பாதிரியார்கள் எல்லோரும் பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்களா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் மலங்கரா ஆர்தோடக்ஸ் சிரியன் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்க வந்த 34 வயது பெண்ணை மிரட்டி 4 பாதிரியார்கள் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் எழுந்தது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை தொடர்ந்து 4 பாதிரியார்கள் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, 4 பாதிரியார்களில் மூவரின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நிராகரித்தது.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் ஜாப் மேத்யூ என்பவரும் ஜான்சன் வி. மேத்யூ என்ற பாதிரியாரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜேஸ் கே.ஜார்ஜ் ஆகிய 2 பாதிரியார்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
இந்த ஜாமின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷன் அமர்வு, "கேரளாவில் என்ன நடக்கிறது? பாதிரியார்கள் எல்லோரும் பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 4 பாதிரியார்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் இதுவரை கேரள போலீஸார் நடத்திய விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கில் மற்றொரு பாதிரியார் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குவதை நிறுத்த முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜேஸ் கே.ஜார்ஜ் ஆகிய இரண்டு பாதிரியார்களின் முன் ஜாமின் மனு விசாரணை மீது தீர்ப்பு வெளிவரும் வரை போலீஸார் அவர்களைக் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.