நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன்.. விஜய் மல்லையா விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன் என சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பி இருக்கிறது.
டெல்லி: விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மேலும் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டு உள்ளது.
பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் விஜய் மல்லையா. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவர் மீது உள்ள வழக்கில் ஆஜராவதற்கு பல முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விஜய்மல்லையாவை ஆஜர்படுத்தினால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
மேலும் இந்த வருடம் இறுதிக்குள் விஜய் மல்லையாவை ஆஜர்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான வேலைகளில் உடனடியாக இறங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இன்னும் விஜய் மல்லையா இந்தியா கொண்டு வரப்படவில்லை. தற்போது இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
அதில் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதில் தாமதம் ஏன் என்று மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறது. மேலும் டிசம்பர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது.
அதேபோல் நீதிமன்ற உத்தரவை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது. விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நாளில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதமன்றம் தெரிவித்துள்ளது.