டெல்லி வாகன கட்டுப்பாட்டை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள வாகன கட்டுப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒரு புதிய திட்டத்தை டெல்லி அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும்.
அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம் எனக் கூறியிருந்தது. இந்த திட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை உடனடியாக ரத்து செய்யக் கோரி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், தனது மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
"டெல்லி மக்களை காற்று மாசு ஒவ்வொரு நாளும் அழித்து வருகிறது. தலைநகரில் உள்ள மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கும் வகையில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.பொதுவான நலன் கருதி தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் விறுப்பு வெறுப்புகளை தள்ளிவைக்க வேண்டும். எனவே இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
சுய விளம்பரத்துக்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.