வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும் '49 ஓ' பட்டன்... அலறும் அரசியல் கட்சிகள்!
சென்னை: கிரிமினல் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவியில் நீடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியதைப் போல தற்போது வேட்பாளர்களை வாக்காளர்கள் நிராகரிக்கும் உரிமையை உறுதிப்படுத்தி '49ஓ' பட்டனை வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
பியூசில் என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார் உச்சநீதிமன்றத்தில், தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நிராகரிக்கும் உரிமையும் வாக்காளருக்கு உண்டு என்று கோரி பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்து அதிரடித் தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பு சொல்வது என்ன?
ஒரு வாக்காளர் தமது தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை பெற்றவர். இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனால் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இந்த உரிமையை வாக்காளர் பயன்படுத்தும் வகையில் நிராகரிக்கும் பட்டனை பொருத்த வேண்டும் என்பதுதான் தீர்ப்பு.
49 ஓ படிவம்
தற்போது நடைமுறையில் வாக்குப் பதிவின் போது யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதை தெரிவிக்க 49 ஓ என்ற படிவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது எந்த ஒரு வேட்பாளருக்கும் தாம் வாக்களிக்க விரும்பவில்லை என்று வாக்குச் சாவடியில் கொடுக்கப்படும் 49 ஓ படிவத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. இது நெகட்டிவ் வோட் அல்லது எதிர்மறை வாக்கு என்று அழைக்கப்படுகிறது.
49 ஓவில் ரகசியம் காப்பு இல்லை
ஆனால் 49 ஓவில் ரகசியம் காக்கப்பட வாய்ப்பு இல்லை. யார் யார் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிடுகிறது.
49 ஓவினால் வந்த விசாரணை
தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் 49 ஓவை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 24,591. இவர்களைப் பற்றிய விவரங்கள் பகிரங்கமானதாக இருந்தன. அதனால் கியூ பிரிவு போலீசார் இவர்களுக்கும் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்தது. பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போய் கியூ பிரிவு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது
தற்போதைய தீர்ப்பால் பலன்
ஆனால் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தற்போதைய தீர்ப்பின்படி அதாவது 49 ஓவுக்கு படிவம் என்றில்லாமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே ஒரு பட்டனை சேர்த்துவிட வேண்டும். அப்படி சேர்த்துவிடும் போது எந்த பட்டனை வாக்காளர் அழுத்தினார் என்பது பகிரங்கப்படுத்தப்படாமல் இருக்கும்.
உச்சநீதிமன்றம் கண்டிப்பு
அத்துடன் 49 ஓ பட்டனை பயன்படுத்துவோர் பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதற்கும் பட்டன் இருக்கிறது என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு என்ன சொன்னது?
இந்த வழக்கில் நிராகரிப்பு உரிமைக்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தல் என்பது வாக்களிக்கத்தானே தவிர நிராகரிக்க அல்ல. அப்படி ஒரு கூடுதல் பட்டன் வைத்தால் குழப்பம் ஏற்படும் என்றெல்லாம் கூறியது. ஆனால் நீதிபதிகள் இதை நிராகரித்துவிட்டனர்.
தீர்ப்பால் என்ன விளைவு ஏற்படும்?
பொதுவாக ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 30% பேர் வாக்களிப்பதே கிடையாது. இப்படி ஒரு நிராகரிப்பு பட்டன் வசதி செய்யப்படும் நிலையில் வாக்களிக்க விரும்பாதோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு சிக்கல்
ஏற்கெனவே கிரிமினல் பின்னணி கொண்டோரை தேர்தலில் நிறுத்துவதில் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன அரசியல் கட்சிகள். தற்போது 49 ஓ பட்டன் இணைக்கப்படும் நிலையில் நிச்சயமாக 'நல்ல' வேட்பாளரை தேடிக் கண்டுபிடித்தாக வேண்டிய நிலைக்குத்தான் அரசியல் கட்சிகள் செல்ல வேண்டும்.
மறுதேர்தல் கோரிக்கை
இப்படி நிராகரிப்போர் எண்ணிக்கை அதாவது 49 ஓவை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 50% இருந்தால் அத்தொகுதியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்பதும் ஒருதரப்பார் கோரிக்கை. இதுவும் அரசியல் கட்சிகளுக்கு அடிவயிற்றை கலக்கியிருக்கிறது.
அரசு அவசர சட்டம் கொண்டுவருமா?
கிரிமினல் எம்,பி, எம்.எல்.ஏக்களின் பதவிக்கு வேட்டு வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வரிந்து கட்டின அரசியல் கட்சிகள். தற்போது மத்திய அரசு அவசர சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகள் தற்போதைய தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் மறுபடியும் ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து இந்த தீர்ப்பையும் நீர்த்துப் போகச் செய்யுமோ என்ற அச்சமும் அரசியல் பார்வையாளர்களிடம் இருக்கிறது.
5 மாநில தேர்தல்களில் அறிமுகம்?
அப்படி மத்திய அரசு எந்த ஒரு முட்டுக் கட்டையும் போடாமல் போனால் டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் வாக்காளர்கள் இந்த நிராகரிப்பு உரிமையை பயன்படுத்தலாம்.