மனைவியுடன் குடும்பம் நடத்துமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது... சுப்ரீம் கோர்ட் கருத்து!
மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: இரு மனித உறவுகள் சம்பந்தப்பட்டது என்பதால் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த விமானி ஒருவர் தனது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன் ஜாமின் வழங்குமாறு அந்த பைலட் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மனைவியுடன் சமாதானமாக செல்வதாக விமானி ஒப்புகொண்டதையடுத்து அவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. ஆனால் ஒப்புகொண்டபடி விமானி தன்னுடைய மனைவி மற்றும் மகளை பராமரிக்காத நிலையில் அவரது ஜாமினை மதுரை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்துள்ளது.
விமானி வழக்கு
இதனையடுத்து விமானி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல் மற்றும் யு.யு.லலித் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு ஜாமின் தர ஒத்துக் கொள்வதாகவும் அதற்கு முன் தொகையாக விமானி ரூ. 10 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
நீதிபதிகள் மறுப்பு
அந்தப் பணத்தை விமானியின் மனைவி தனது அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த தொகையை வழக்கு விசாரணை முடிந்த பின்னர் சரி செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனுதாரர் வைப்புத் தொகையை குறைக்கும்படி நீதிபதிகளிடம் கேட்ட போதும் முன்பண தொகையை குறைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
கணவனை கட்டாயப்படுத்த முடியாது
இது குடும்ப நல நீதிமன்றமல்ல, இங்கு எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை, பணத்தை டெபாசிட் செய்தால் முன் ஜாமின் கிடைக்கும் என்று நீதிபதிகள் கராராக சொல்லிவிட்டனர். மேலும் மனித உறவுகள் தொடர்புடையது என்பதால் மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவத்துள்ளனர்.
அமலுக்கு வரும்
எனவே வழக்கு முடியும்வரை இடைக்கால நிவாரணமாகவே அவர்களுக்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முன்பணத்தை செலுத்த அந்த விமானி ஒப்புக் கொண்டு உடனடியாக பணத்தை செலுத்தினார் முன்ஜாமின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.