ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து உதவுவோம்: கர்சாயை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ் வாக்குறுதி
காபுல்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயை சந்தித்து பேசினார்.
ஆப்கானிஸ்தானில் அண்மையில் தான் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா, முன்னாள் நிதி அமைச்சர் அஸ்ரப் கனி ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று ஆப்கானிஸ்தான் சென்றார்.
விமான நிலையத்தில் இறங்கிய அவர் நேராக அதிபர் மாளிகைக்கு காரில் சென்றார். அங்கு அவர் அதிபர் ஹமீது கர்சாயை சந்தித்து பேசினார். அப்போது அரசியல், பாதுகாப்பு நிலைமை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஆப்கானிஸ்தானுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக சுஷ்மா தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று சுஷ்மா கர்சாயிடம் உறுதி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் இந்த ஆண்டு இறுதியில் கிளம்ப உள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்த அந்நாடு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் தான் சுஷ்மா ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார்.
நேட்டோ படைகள் கிளம்புவதால் ராணுவத்திற்கு உதவுமாறு கர்சாய் இந்தியாவிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.