பாலியல் புகாரில் சிக்கிய ஏ.கே. கங்குலிக்கு சு.சுவாமி ஆதரவு- சுஷ்மாவுடன் மோதல்!!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர் ஏ.கே. கங்குலி. இவர் தற்போது மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளார்.
அண்மையில் சட்ட பயிற்சி மாணவர் ஒருவர், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று இணையத்தில் பதிவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமே இது தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது.
அந்த சட்ட பயிற்சி மாணவியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஓய்வு பெற்ற நீதிபதி கங்குலிதான் என தெரிய வந்தது. இது தொடர்பாக கங்குலியிடம் 7 முறை உச்சநீதிமன்ற குழு விசாரணை நடத்தி அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியை ஏ.கே. கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. அத்துடன் கங்குலியின் ராஜினாமாவை வலியுறுத்தி கொல்கத்தாவில் நேற்று ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இதனிடையே பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், ஏ.கே.கங்குலி தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியிருந்தார். ஆனால் சுஷ்மாவின் இக்கருத்தை மற்றொரு பாஜக தலைவரான சுப்பிரமணியன் சுவாமி நிராகரித்திருக்கிறார்.
அவர் இதுபற்றி கூறுகையில், ஏ.கே. கங்குலி மீது புகார்தான் வந்துள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. யாரோ சொன்ன புகாருக்காக அவர் ஏன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.