இந்து தீவிரவாதம் குறித்து ஆதாரம் இருக்கிறதா? என கமல்ஹாசனிடம் என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: சு.சுவாமி
இந்து தீவிரவாதம் தொடர்பான கமல்ஹாசனின் கருத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை: இந்து தீவிரவாதம் குறித்து ஆதாரங்கள் இருக்கிறதா? என நடிகர் கமல்ஹாசனிடம் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் விமர்சன் வார இதழ் ஒன்றில் வெளியானது. இதற்கு பாஜக மற்றும் ஆதரவு அமைப்புகள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இடதுசாரிகளோ கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்துகளை கூறி வருகின்றனர்.
கமல் ஊழல் பேர்வழி
இது தொடர்பாக பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் குறித்து கூறியுள்ளார். இந்து அமைப்புகள் எதுவுமே தீவிரவாத இயக்கமே இல்லை. கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் அவர் ஊழல்பேர்வழி.
சீரியஸாக எடுக்காதீர்
எந்த நேரத்திலும் எதையும் செய்யக் கூடியவர்; அவர் கூறுவதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ள கூடாது.
என்ஐஏ விசாரிக்கனும்
கமல்ஹாசனிடத்தில் இந்து தீவிரவாதம் குறித்த ஆதாரம் இருக்கிறதா? என தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும். அப்படியான ஆதாரங்கள் இருந்தால் உரிய அதிகாரிகளிடம் கமல் தர வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கமலுக்கு இடதுசாரிகள் ஆதரவு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, கமல்ஹாசனின் கருத்துகள் வரவேற்கத்தக்கது. நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் இந்துத்துவா சக்திகள் சீர்குலைத்து வருகின்றன என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி ராஜா, இந்துத்துவாதிகள் தத்துவார்த்த தளத்தில் தோற்றுப் போய்விட்டனர்; அதனால் வன்முறையை ஏவுகிறார்கள் என்றார்.