'நோ' துணைவேந்தர் பதவி.. 'ஒன்லி' மத்திய அமைச்சர் பதவிதான்...அடம்பிடிக்கும் சு.சுவாமி
டெல்லி: பல்கலைக் கழக துணைவேந்தர் போன்ற பதவிகளை விட மத்திய அமைச்சர் பதவிதான் தமக்கு வேண்டும் என்பதில் சுப்பிரமணியன் சுவாமி உறுதியாக இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்ற போது, மத்தியில் பா.ஜ.க. அரசு அமையும்; தமக்கு நிதி அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவந்தார். தேர்தலுக்கு பின்னர் மோடி தலைமையிலான அரசு அமைந்த போது சுப்பிரமணியன் சுவாமி ஒதுக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு மாநில ஆளுநர் பதவியை தர மத்திய அரசு முன்வந்த போது, நான் ஆக்டிவ் பாலிடிக்ஸ்லில் இருப்பவன்; ரிட்டையர்டு போஸ்ட் வேண்டாம் என்று நிராகரித்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதராகவோ அல்லது மேற்குலக நாடு ஒன்றின் தூதராகவோ சுவாமி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
ஒருகட்டத்தில் இந்தியாவுக்கான ஐ.நா. நிரந்தர பிரதிநிதியாக அவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. பின்னர் பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கிய வங்கியின் தலைவர் பதவியை சுப்பிரமணியன் சுவாமிக்கு கொடுக்க மத்திய அரசு முன்வந்த போதும் அவர் நிராகரித்துவிட்டாராம்.
தற்போது புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவியை மத்திய அரசு கொடுக்க முன்வந்துள்ளது; ஆனால் தமக்கு மத்திய அமைச்சர் பதவியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறாராம் சுப்பிரமணியன் சுவாமி.