ஐ.எஸ்ஸை விட தாலிபான்கள்தான் இந்தியாவிற்கு “முதல் எதிரி”- மாஜி ஆப்கன் தேசிய பாதுகாப்பு அதிகாரி
டெல்லி: இந்தியாவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட தாலிபான்களால் மட்டுமே பெரிய அச்சுறுத்தல் உண்டாக வாய்ப்புகள் அதிகம் என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரி அம்ருல்லா சலே தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை விட தெற்காசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோரை அவர்கள் கொன்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் மூலமாக ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் மறைமுக போரில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தெற்காசிய அளவில் இந்தியா கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் இதனை அவர் தெரிவித்தார்.
மேலும், "தலிபான்கள் ஏராளமான அமெரிக்கர்களையும், ஆப்கானிஸ்தான்களையும் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர்களையும் கொன்றுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை விட இந்தியாவின் மீது அதிக பாதிப்பை விளைவிக்க கூடியவர்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை விட அதிகமான கொலைகளையும், வாகன எரிப்புகளையும் தலிபான்கள் செய்துள்ளனர்." என்று சலே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.