தமிழகத்தில் அமையும் 12 'ஸ்மார்ட்' சிட்டிகள் குறித்த திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிப்பு !
டெல்லி: தமிழகத்தில் அமையவிருக்கும் 12 ஸ்மார்ட் சிட்டிகள் குறித்த திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசிடம் இன்று சமர்பித்துள்ளது.
இந்தியா முழுவதும் 98 ஸ்மார்ட் சிட்டிகளை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 12 நகரங்களையும் சேர்த்து நாடு முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தங்கள் மாநிலங்களில் அமையவிருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் குறித்த வரைவு அறிக்கையை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அமையவிருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் குறித்த திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு மத்திய நகர்ப்புற அமைச்சகத்திடம் இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு காரணமாக, திட்ட வரைவை சமர்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்படும்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய 12 நகரங்களை ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் கொண்டுவர தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாக, மத்திய நகர்புற அமைச்சகம் அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 20 ஸ்மார்ட் நகரங்களுக்கான திட்ட நிதி மதிப்பீடு நடப்பு நிதியாண்டில் அறிவிக்கப்படும். பின்னர் 40 நகரங்களுக்கான நிதி மதிப்பீடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்படும் என, மத்திய நகர்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.