நாட்டிலேயே அதிக பெண் 'அம்பானிகள்' தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்! சர்வே சொல்வதை பாருங்கள்
டெல்லி: பெண்கள் தொழில் முனைந்து முன்னேற்றம் அடைவதில் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகப் பெண்கள் தொழில் முனைவதில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக முதல் இடத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள பெண்களே அதிக அளவில் படித்த பெண்களாக உள்ளனர். அதே போன்று, பொருளாதார சென்சஸ் 2012 வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் உள்ள பெண் தொழில் முனைவோரில் 53 சதவீதம் இந்த 5 மாநிலங்களைச் சேர்ந்த பெண்களாக இருந்து வருகின்றனர். மொத்த இந்தியாவில் உள்ள பெண்களில் 33 சதவீதத்திற்கு குறைவாகவே இந்த 5 மாநிலங்களில் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றாலும் தொழில் துறையில் இவர்களின் பங்கு 50 விழுக்காட்டை தாண்டிச் செல்கிறது.
படித்தவர்களில் முதல் இடத்தில் இருப்பது கேரள மாநிலம். 2வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும், அதனைத் தொடர்ந்து தமிழகம் 3வது இடத்திலும் உள்ளது. இவர்களில் ஒரு மில்லியன் பெண்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முதலிடம்
தமிழகத்தில் உள்ள மொத்த பெண்களில் 73.4 சதவீதம் பேர் படித்தவர்களாக உள்ளனர். அதே போன்று தமிழகத்தில் பெண் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்தியாவிலேயே 13.5 சதவீதம் பெண் தொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2ம் இடத்தில் கேரளா
இந்தியாவில் கல்வி பெற்ற மாநிலங்களில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது. அதே போன்று இங்கு கல்வி பெற்ற பெண்கள் 92.1 சதவீதமாக இருக்கின்றனர். இங்கு 11.3 சதவீதம் பெண் தொழில் முனைவோர் உருவாகி தொழில் நடத்தி வருகின்றனர். கேரளம் இந்தியாவில் பெண் தொழில் முனைவோரில் 2வது இடத்தில் உள்ளது.
3ம் இடத்தில் ஆந்திரம்
ஆந்திராவில் மொத்தம் 59.1 சதவீத பெண்கள் படித்திருந்தாலும் அங்கு 10.5 சதவீதம் பெண்கள் தொழில் முனைவதில் ஈடுபட்டு, இந்தியாவிலேயே 3வது இடத்தில் உள்ளது.
4ம் இடத்தில் மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் 70.5 சதவீதம் பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். இந்தப் பெண்களில் 10.3 சதவீதம் பேர் பெண் தொழில் முனைவோராக இருந்து சாதித்து வருகின்றனர்.
5ல் மகாராஷ்டிரம்
75.9 சதவீதம் பெண்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் படித்தவர்களாக உள்ளனர். அதில் 8.2 சதவீதப் பெண்கள் தொழில் முனைவோராக இருந்து வருகின்றனர்.
பெண்களுக்கு நிதித்துறை கல்வி குறைவு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 65.5 சதவீதம் பெண்கள் படித்திருந்தாலும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பெண்கள் வெறும் 25.5 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதே போன்று பெண்களுக்கு நிதி தொடர்பான கல்வி குறைவாக இருப்பதால் நிதித்துறை சேவையில் பங்கேற்பதில் குறைவாக உள்ளதாக உலக வங்கியின் 2014 அறிக்கை தெரிவித்துள்ளது.
10ம் வகுப்பை முடித்த பெண் தொழில் முனைவோர்
இந்த 5 மாநிலங்களில் உள்ள தொழில் முனையும் பெண்கள் அனைவரும் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக உள்ளனர். பெண்கள் தொழில் முனைவோரில் 5வது இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 77.4 சதவீதப் பெண்கள் 10 வது அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக உள்ளனர்.
இந்த தர வரிசைப் பட்டியலில் 1.9 சதவீத பெண் தொழில் முனைவோர் பெற்றுள்ள பீகார் மாநிலத்தில் கூட 56 சதவீதப் பெண்கள் 10ம் வகுப்பு முடித்தவர்களாக உள்ளனர்.
வேலைவாய்ப்பு வழங்கிய பெண்கள்
இந்தியாவில் உள்ள 58.6 மில்லியன் தொழில் நிறுவனங்களில் 8.05 மில்லியன் தொழில் நிறுவனங்களை பெண்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 13.4 மில்லியன் மக்களுக்கு வேலைகளை வழங்கி சேவை புரிந்து வருகிறார்கள் பெண்கள்.