சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டு அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்
டெல்லி: மெரீனா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதென வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து, சிலையை அகற்ற மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிலை இதுவரை அகற்றப்படாததையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீது திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2014 ஜனவரி 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி சிவாஜி சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இது குறித்து வரும் நவம்பர் 16-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,
நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டுவதற்காக பல்வேறு துறைகளுடன் தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. தற்போது காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, தமிழக அரசு கட்டப்போகும் அந்த மணிமண்டபத்தில் வைக்கப்படும்.
மணிமண்டபம் கட்டுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படும். எனவே அதுவரை நடிகர் சிவாஜி சிலையை தற்போது உள்ள காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பிலேயே தொடர்ந்து வைத்திருக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.