ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா பெயர்... இத்தாலி தரகர் கடிதத்தில் பரபரப்பு தகவல்
இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்கள் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக 12 சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன் மதிப்பு ரூ.3,600 கோடி ஆகும்.
இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழலில் இத்தாலியின் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கியூசெப்பி ஆர்சி, பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைவர் புருனோ ஸ்பாக்னாலினி, ஆகியோர் இத்தாலி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஊழலில், சி.பி.ஐ. விசாரணைக்கு ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி உத்தரவிட்டார். சி.பி.ஐ. விசாரணை நடத்தி இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, ஐரோப்பிய இடைத்தரகர்கள் கார்லோ ஜெரோசா, கிறிஸ்டியன் மைக்கேல், கெய்டோ ஹாசெக்கி உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய கிளையில் பணியாற்றிய பீட்டர் புல்லெட் என்பவருக்கு எழுதிய கடித தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டியன் மைக்கேல் எழுதிய கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணப் முகர்ஜி, வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், எம்.கே. நாராயணன் மற்றும் அகமத் படேல் ஆகியோரில் யாரையாவது தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
இந்த கடிதம் இத்தாலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பேர ஊழலில் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கடிதம் வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.