உற்சாகமில்லா ஓபிஎஸ் அணி... உடனே ஜெ. கல்லறைக்குப் போன தினகரன்... அப்ப இரட்டை இலை யாருக்கு?
இரட்டை இலை தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில் ஓபிஎஸ் அணியிடம் உற்சாகம் அவ்வளவாக இல்லை. ஆனால் ரிசல்ட் லீக்கானது போல சசிகலா தரப்பு துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறது.
டெல்லி/சென்னை: தேர்தல் ஆணைய வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஓபிஎஸ் அணியிடம் நாம் பேசிய போது உற்சாகம் அதிகமில்லாதவர்களாக இருந்தனர்; ஆனால் சசிகலா தரப்பு தினகரனோ உடனே வேட்புமனுவுடன் ஜெயலலிதாக் கல்லறைக்குப் போய்விட்டார்... இதனால் இரட்டை இலை ஓபிஎஸ் அணிக்கு கிடைப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பாக இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சசிகலா அணியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
காலையில் ஓபிஎஸ், மாலையில் சசி
ஓபிஎஸ் அணியின் சார்பில் சி.எஸ். வைத்தியநாதன், குருகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாதிட்டனர். காலையில் ஓபிஎஸ் அணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவியது. ஆனால் பிற்பகலில் சசிகலா தரப்பு வாதங்களைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது.
எந்த நேரத்திலும் ரிசல்ட்
இருதரப்பு வாதங்களும் நிறைவு செய்த நிலையில் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் முடிவை வெளியிடலாம். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததுதான் தாம் ரிசல்ட் வெளியாகிவிட்டது போல உடனே ஜெயலலிதாவின் கல்லறைக்குப் போய் வேட்புமனுவை வைத்து வணங்கினார் தினகரன்.
நம்பிக்கையில் தினகரன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரத்தில் டெல்லியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ் அணி மூத்த நிர்வாகிகளிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களும் எங்களுக்கே சாதகமான தீர்ப்பு வரும் என்று கூறினார்களே தவிர அதில் உற்சாகம் ஏதும் தென்படவில்லை.
சசி அணிக்கா?
இந்த சமிக்ஞையானது இரட்டை இலை சின்னமானது சசிகலா தரப்பு வசம் செல்லக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்றே கூறப்படுகிறது. சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் நிலையில் இதை எதிர்த்து ஓபிஎஸ் அணி நீதிமன்றத்துக்கு செல்லலாம் எனவும் தெரிகிறது.