சாலை பள்ளத்தால் ஸ்கூட்டர் சரிந்து பெண் சாவு.. கணவர் மீது வழக்கு! சர்ச்சையில் பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: சாலை பள்ளத்தினால் ஏற்பட்ட விபத்தில் 25 வயது பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்த நிலையில், விபத்துக்கு காரணம் என்று அந்த பெண்ணின் கணவர் மீது பெங்களூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு தேசிய அளவில் எதிர்ப்பு குரல்கள் எழ தொடங்கியுள்ளன.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் திரிபாதி (28). அவரது மனைவி ஸ்ருதி பாண்டே திரிபாதி (25). சாப்ட்வேர் இன்ஜினயர்களான இருவரும் பெங்களூர் பனசங்கரி பகுதியில் வசித்து வந்தனர்.
சாலை பள்ளம்
கடந்த வியாழக்கிழமை, ஓம் பிரகாஷ் தனது ஸ்கூட்டரின் பின்னால் ஸ்ருதியை அமர்த்திக்கொண்டு மாரத்தஹள்ளியிலுள்ள நண்பர் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு இரவு 9 மணியளவில் திரும்பிக்கொண்டிருந்தார். எச்.ஏ.எல் ஓல்ட் ஏர்போர்ட் அருகேயுள்ள தேவரபீசனஹள்ளி பகுதியில் ஸ்கூட்டர் வந்தபோது, சாலையில் இருந்த பெரிய பள்ளத்தை ஓம் பிரகாஷ் கவனித்துள்ளார். ஸ்கூட்டர் அந்த பள்ளத்தில் இறங்கினால் அவ்வளவுதான்.. என்று நினைத்த ஓம் பிரகாஷ் வண்டியை இடதுபுறம் திடீரென திருப்பியுள்ளார்.
மனைவி சாவு
இதனால் ஸ்கூட்டர் சரிந்தது. இருவரும் கீழே விழுந்தனர். ஆனால் ஓம் பிரகாஷ் ஹெல்மெட் அணிந்திருந்ததால், கை, கால்களில் ஏற்பட்ட சிராய்ப்புடன் தப்பினார். ஸ்ருதியோ தலையில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
கணவர் மீது வழக்கு
இந்நிலையில், போலீசார், ஓம் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் பொறுப்பற்ற முறையில் வேகமாக வாகனத்தை செலுத்தியதுதான் விபத்துக்கு காரணம் என்கிறது காவல்துறை. ஓம் பிரகாஷ் மீது சட்டப்பிரிவு 304ஏ மற்றும் 279 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 வருட சிறை
இந்த சட்டங்களின்கீழ், ஓம்பிரகாஷுக்கு அதிகபட்சமாக 2 வருட சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து ம.பி.யில் நடைபெற்ற மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்றிருந்த ஓம்பிரகாஷ் கூறுகையில், "நான் மெதுவாகத்தான் வாகனத்தை ஓட்டிச் சென்றேன். என்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.
சட்ட வல்லுநர்கள்
மூத்த வழக்கறிஞர் டி.நானய்யா கூறுகையில், டிராபிக் போலீசார் பொறுப்பற்றதனமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மீதுதான், செக்ஷன் 304ன்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். சாலையை பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் வேலை. விபத்துக்கு மோசமான சாலைதான் காரணம் என்றார்.
சமாளிக்கும் போலீஸ்
இந்த வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பல சட்ட வல்லுநர்கள், பெங்களூர் காவல்துறையை கண்டித்துள்ளனர். இதுகுறித்து நகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் கமிஷனர் சலீம் கூறியது: விபத்து நடைபெற்றதுமே, வாகனத்தை ஓட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவது வழக்கம். விசாரணையில் அவர் மீது தவறு இல்லை என்று தெரியவந்தால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார். காரணம் தெரியாமல், முன்கூட்டியே எதையும் கூற முடியாது என்றார்.