காதல், சாய்ராத், சங்கர் படுகொலை.. தெலுங்கானாவை புரட்டிப்போட்ட அம்ருதா ஆணவ படுகொலை!
தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமார், அம்ருதவர்ஷினி திருமணமும் அதற்கு பின்பான பிரணாய் குமார் கொலையும் இந்தியாவையே அதிர செய்துள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமார், அம்ருதவர்ஷினி திருமணமும் அதற்கு பின்பான பிரணாய் குமார் கொலையும் இந்தியாவையே அதிர செய்துள்ளது.
காதல் பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும். முருகனும் ஐஸ்சும் திருமணம் செய்து வாழ தொடங்கிய பின், சில நாட்களில் முருகன் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டு பைத்தியமாக்கப்படுவார். இதேபோல் மராத்தியில் வந்த சாய்ராத் படத்தில் ஜாதி மாறி திருமணம் செய்த ஜோடி நன்றாக வாழ தொடங்கி சில நாட்களில் இரண்டு பேருமே பெண் வீட்டாரால் கொலை செய்யப்படுவார்கள்.
இது நிஜத்தில் உடுமலைப்பேட்டை கவுசல்யாவின் வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போது தெலுங்கானாவில் அதேபோல் உயிரை உறைய வைக்கும் ஜாதி ஆணவ கொலை ஒன்று நடந்து இருக்கிறது.
சிறு வயதில் இருந்தே காதல்
தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமாரும், அம்ருதவர்ஷினியும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்து இருக்கிறார்கள். அதன்பின் கல்லூரியும் ஒரே கல்லூரியில் சேர்ந்து உள்ளனர். இந்த நிலையில் கல்லூரிக்கு வந்த பின் தான் அவர்கள் காதலிக்க தொடங்கி உள்ளனர். இதை வீட்டில் சொன்ன போது இரண்டு வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை.
ஜாதி மாறி திருமணம்
அம்ருதவர்ஷினி ''ஓசி'' வகுப்பை சேர்ந்தவர், பிரணாய் குமார் பட்டியலின சாதியை சேர்ந்தவர். இதனால் பெண் வீட்டில் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் வீட்டை விட்டு வெளியேறி அம்ருதவர்ஷினியும் பிரணாய் குமாரும் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் நடந்தது கடந்த ஜனவரி மாதம்.
மாப்பிள்ளை வீட்டில் ஒப்புக்கொண்டனர்
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம், பிரணாய் குமாரின் வீட்டில் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிரணாய் குமார் வீட்டிலேயே சென்று தங்கி உள்ளனர். ஆனால் அம்ருதவர்ஷினி வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்துள்ளது.
கர்ப்பமாக இருந்தார்
இந்த நிலையில்தான் அம்ருதவர்ஷினி கர்ப்பமாகி உள்ளார். இதனால், தெலுங்கனாவின் நல்கொண்டா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வாராவாரம் மனைவி அம்ருதவர்ஷினியை அழைத்து சென்றுள்ளார் பிரணாய் குமார். இவர்கள் திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கு எடுத்த வீடியோ எல்லாமும் இப்போதும் இவர்கள் பேஸ்புக் பக்கத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. மிகவும் அழகான வாழ்க்கைக்கு இவர்கள் காத்திருந்திருக்கிறார்கள்.
அம்மா மட்டும் பேசிக்கொண்டு இருந்தார்
இந்த நிலையில் அம்ருதவர்ஷினியின் அம்மா மட்டும் அவ்வப்போது அம்ருதவர்ஷியிடம் பேசியுள்ளார். மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து, அவ்வப்போது போன் செய்து பேசி இருக்கிறார். ஆனால் அம்ருதாவின் அம்மா வேறு ஒரு காரணத்திற்காக இப்படி போனில் பேசி இருப்பதாக இப்போதுதான் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. கடைசியாக நல்கொண்டா மருத்துவமனைக்கு செல்லும் முன் அம்ருதா தன் அம்மாவிடம் சொல்லிவிட்டுதான் சென்றுள்ளார்.
|
கொலை செய்தனர்
இதை வைத்து பிரணாய் குமாரை கொலை செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது அம்ருதா பிரணாய் ஜோடியை பின்தொடர்ந்து வந்த சுபாஷ் சர்மா என்ற கூலிப்படை கொலையாளி, பிரணாயை பின்னிருந்து தாக்கி, கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அம்ருதா கண் முன்னே இந்த கொலை நடந்து இருக்கிறது. இந்த கொலையின் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அச்சம் ஊட்டியது.
1 கோடி ரூபாய் திட்டம்
இந்த கொலைக்காக அம்ருதாவின் அப்பா மாருதி ராவ் 1 கோடி ரூபாய் விலை பேசி இருக்கிறார். 8 பேர் கொண்ட கூலிப்படையிடம் 16 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து கொலை செய்ய சொல்லியுள்ளார். மருத்துவமனையில் கொலை செய்ய முடியவில்லை என்றால் வேறு இடத்தில் கொலை செய்ய ஆட்கள் தயாராக இருந்துள்ளனர். இரண்டு மாதமாக இந்த கொலைக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
யார் செய்தது
அம்ருதாவின் அப்பா மாருதி ராவ்தான் இந்த கொலையின் முக்கிய குற்றவாளி. தன் மகள் பட்டியலின சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால் இந்த கொலையை செய்ததாக அவரே கூறியுள்ளார். ஆனால் இப்படி வெளிப்படையாக பேசியவரை கைது செய்யவே போலீஸ் ஒரு வார காலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுதான் இவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
வழக்கு விசாரணை
தமிழகத்தில் கவுசல்யாவின் கணவர் சங்கர் உடுமலைபேட்டையில் கொலை செய்யப்பட்டதை போலவே இந்த கொலையும் நடந்து இருக்கிறது. அதில் கவுசல்யா போராடியதை போலவே, தானும் போராட போவதாக அம்ருதா கூறியுள்ளார். அதோடு பிறக்க போகும் குழந்தைதான் தன்னுடைய வாழ்க்கை என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்ப்பத்தை கலைக்க சொன்னார்கள்
இந்த நிலையில் அம்ருதாவின் கர்ப்பத்தை பலமுறை கலைக்க அவரின் குடும்பத்தினர் முயன்று இருக்கிறார்கள். அம்ருதாவின் அம்மா இதுகுறித்து அவ்வப்போது பேசியுள்ளார். கொலைக்கு பின்பாகவும் கூட, இதை பற்றி அம்ருதாவின் அப்பா பேசியுள்ளார். ஆனால் எக்காரணம் கொண்டு இந்த கருவை கலைக்க மாட்டேன் என்று அம்ருதா கூறியுள்ளார்.